திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி.. “இனி என்றும் திமுக கோட்டை தான்”.. திமுக எம்எல்ஏ சரவணன் அறிக்கை!
சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி "இனிமேல் என்றும் திமுக கோட்டை தான்" என்று திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.பா.சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வென்றவர் டாக்டர்.பா.சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவை வலிமைப்படுத்தி வரும் எம்எல்ஏ சரவணன், அந்த தொகுதிக்கு தான் செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு எண்ணற்ற தொகுதி மேம்பாட்டு செயல்களை செய்து கொண்டு வருகின்றேன். முக்கியமாக எனது தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகின்றேன். மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் தொகுப்பை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் மற்றும் மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர்களுக்கு பரிந்துரை கடிதங்களை கொடுத்து வருகிறேன்.
நான் 19.09.2019 மற்றும் 20.11.2019 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மதுரை ஊரக வளர்ச்சி மகமை திட்ட இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து நிலையூர் ஊராட்சிக்குத் தேவையான தார் சாலைகள் , பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சமுதாயக்கூடம், பொது கழிப்பறை, போர்வெல் அமைத்து மேல்நிலை தொட்டி கட்டுதல், கழிவுநீர் சாக்கடை சீரமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் , நியாயவிலைக் கடைக்கு அரசு கட்டிடம் அமைத்தல் , தனி டிராஸ்பார்ம் அமைத்தல் , நிழற்குடை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல், சோடியம் விளக்கு அமைத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை நிலையூர் ஊராட்சியில் செயல்படுத்த வேண்டும் என்று நான் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் இன்று திருப்பரங்குன்றத்திற்கும், நிலையூருக்கும் இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இதனை அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவரான திரு.ராஜன் செல் லப்பா ஏற்பாட்டில் நடப்பதாக செய்திகள் திரித்து வரவைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட மாவட்ட செயலாளர் அவர்கள், அவருடைய சொந்த தொகுதியான வடக்கு தொகுதிக்கே செல்லாதவர். என் தொகுதியில் எவ்வாறு அவர் மேம்பாட்டு செயல்களைச் செய்ய முடியும்.
வசந்தகுமார் விரைவில் வீடு திரும்புவார் என நம்பினேன்.. கொரோனா பிரித்துவிட்டதே.. ஸ்டாலின் உருக்கம்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா காலத்திலும் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற சேவைகளை ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் செய்து வருகிறேன். சொந்தமாக தொகுதிக்கென சொந்த செலவில் தண்ணீர் லாரி வாங்கி தொகுதி முழுதும் இலவச தண்ணீர் வழங்கப்பட்டது. அனைத்து பகுதிகளுக்கும் தமிழகத்திலேயே முதன்முறையாக டிரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாண்புமிகு திமுக தலைவர் தளபதியார் முன்னெடுத்த "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் மூலமாக மக்கள் தேவைகளை கேட்டறிந்து எண்ணற்ற குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது, அரசு மருத்துவமனை மற்றும் எண்ணற்ற சுகாதார பணியாளர்களுக்கும் இலவச முகக்கவசம், கையுறை அளிக்கப்பட்டது,
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்று அதன் அவசியத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஆரம்ப நிலையிலேயே அனைத்து ரேசன் கடைகள் மூலமாக அனைவருக்கும் முகக்கவசம் அளிக்க வலியுறுத்தினேன். கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் அனைவருக்கும் மனநல ஆலோசனை வழங்கினால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என்றும் வலியுறித்தினேன். மிக முக்கியமாக மாண்புமிகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலனுக்காக கொரோனோ நோய் தொற்று காலத்தில் 70க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்தார். அனைத்தையும் காலம் கடந்த பின்பு செயல்படுத்தி அதிமுக அரசு தாங்கள் தான் அதனை நிறைவேற்றினோம் என்று கூறுவதே வழக்கமாகிவிட்டது.
அதுபோன்றுதான் நான் முயற்சி எடுத்து திருப்பரங்குன்றம் தொகுதி நிலையூரில் செய்த அனைத்து பணிகளையும் அதிமுகவினர் தான் செய்தது போல சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வெற்றி பெற்ற ராஜன் செல்லப்பா அடுத்த முறை அவ்வாறு செய்து தனது சொந்த தொகுதிலேயே வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து எப்படியாவது திருப்பரங்குன்றம் தொகுதியினை முயற்சி செய்யலாம் என்று பகல் கனவு கண்டு, நடக்கவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து ஆளும் கட்சி என்ற மமதையில் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அது நிச்சயமாக நடக்காது. ஏன்? அடுத்தமுறை தமிழகத்தை ஆட்சி செய்யப்போவதே திமுக தலைவர் முக ஸ்டாலின்தான் என்பதை சின்ன குழந்தையினை கேட்டால் கூட சொல்லி விடும். இனிமேல் திருப்பரங்குன்றம் என்றுமே திமுக கோட்டை தான்..., என்று திமுக எம்எல்ஏ சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.