வேலூரை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார்.
ஊராட்சி ஒன்றியங்கள்
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது விழுப்புரம் மாவட்டம் ஆகும்.
33 ஆக இருந்தது
விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அண்மையில் பிரிக்கப்பட்டது. இதனால் மொத்தம் மாவட்டங்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்தது.
35 ஆக உயர்வு
இந்த நிலையில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது. தற்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் இனி மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது.
இன்ப அதிர்ச்சி
மிகப் பெரிய மாவட்டமான வேலூரை இரண்டாக பிரித்தால் நிர்வாக ரீதியாக அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் என இந்த கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து தமிழக அரசு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.