காங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் இதோ நெருங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் போட்டா போட்டிக் கொண்டு கூட்டணி, பிரசாரம் என பிஸியாக உள்ளன. தமிழகத்தின் வட கோடி தொகுதி திருவள்ளூர். சென்னைக்கு அருகில் உள்ள தொகுதி. அந்த வகையில் திருவள்ளூர் தொகுதியின் கள நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமே.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த தொகுதியின் எம்பியாக உள்ளவர் அதிமுகவை சேர்ந்த பி. வேணுகோபால். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். இவரது வயது 66 ஆகும்.
86 சதவீதம் வருகை பதிவு
இதுவரை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களில் 66 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். இதுவரை தனிநபர் மசோதாக்களை இவர் தாக்கல் செய்ததில்லை. நாடாளுமன்றத்துக்கு இவரது வருகை பதிவும் 86 சதவீதம் ஆகும்.
வாக்காளர்கள்
இதுவரை இவர் கேட்ட கேள்விகள் 615 ஆகும். கடந்த 2014-ஆம் ஆண்டை பொருத்தவரையில் இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 17,02,833 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 8,52,794 பேரும், பெண் வாக்காளர்கள் 8,50, 039 பேரும் உள்ளனர்.
ரவிக்குமார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதி பெற்ற வாக்குப் பதிவு சதவீதம் 74 ஆகும். இந்த தொகுதி எஸ்சி தொகுதியாகும். கடந்த முறை வேணுகோபாலை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் நிறுத்தப்பட்டார். இவரை 3,23,430 வாக்குகளில் வேணுகோபால் தோற்கடித்தார்.
செலவு
இவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதியை இவர் முறையாக பயன்படுத்தியுள்ளார். மொத்தம் ஒதுக்கப்பட்ட 18.15 கோடியில் 17.15 கோடியை செலவு செய்துள்ளார்.
வேட்பாளர் ஒருவர்
கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த திருவள்ளூர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் முதல் அதிமுகவின் கோட்டையாக மாறியது. அதிலும் இரு முறை ஒரே வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார்.
முடிவுகள்
எனவே இந்த முறையும் வேணுகோபாலுக்கே வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. ஒரு வேளை அதிமுக கூட்டணி வைத்தால் மட்டுமே வேட்பாளர் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது ஜெயலலிதா இல்லாததால் இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் அதிமுக மீது பல்வேறு விவகாரங்களில் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாமல் போனதும் முடிவுகள் மாறுவதற்கு காரணமாக அமையலாம். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.