நாளை தைவானுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் விழா.. சென்னையில் அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தைவான் தமிழ்ச் சங்கம், சென்னை பாரதியார் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து தைவானில் இரு திருவள்ளுவர் சிலைகளை நிறுவுகின்றன.
விஜிபி-உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக தைவான் தமிழ்ச்சங்கம் மற்றும் சென்னை பாரதியார் தமிழ்ச் சங்கம் இணைந்து தைவானில் வரும் அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் இரு திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் நிறுவப்படுகின்றன.
அச்சிலைகளை தைவான் நாட்டிற்கு வழியனுப்பும் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு வரும் செப்டம்பர் 6-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ (எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி) வளாகத்தில் நடைபெற உள்ளது.
விஜிபி- உலகத்தமிழ்ச் சங்க நிறுவனர் வி. ஜி. சந்தோசம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.