திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம்..!
சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் பணிகள் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
முதலமைச்சர் அறிவிப்பு
சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகம் வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவதால் அந்த மண்ணின் மைந்தரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
காரசார விவாதம்
துரைமுருகனுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை போடுவதாக சாடினார். மேலும், நிர்வாக வசதிக்காகவே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த துரைமுருகனால் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
முதலமைச்சருக்கு நன்றி
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்து பேசினார். இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடப்பாண்டிலேயே புதிய பல்கழைக்கழகம் அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
வட தமிழகம்
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும் என அந்த மாவட்ட மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்தக் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதிய பல்கலைக்கழகத்துக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.