திருவான்மியூர் பீச்சில் தம்பதியிடம் நகை கொள்ளையில் திடீர் திருப்பம்.. மனைவியே ரூட் போட்டது அம்பலம்!
சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியிடம் நகை திருட்டில் மனைவிக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் அம்பலமானது.
சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையைச் சேர்ந்தவர் கதிரவன் (30). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதியான கதிரவனும் அனிதாவும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள் வந்தனர். இருவரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர். எனினும் நகைகளை தர கதிரவன் எவ்வளவோ போராடினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அனிதாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
புகாரின் பேரில் திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டனர்.
அந்த நேரத்தில் அனிதாவின் நடவடிக்கையில் சிறு மாறுதல் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டார். தனது ஆண் நண்பர் மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்த கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து அனிதாவையும் ஆண் நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.