திருவண்ணாமலை தீப திருவிழா: மாட வீதிகளில் தேரோட்டம் நடத்த உத்தரவிட முடியாது - ஹைகோர்ட்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஒட்டி நான்கு மாட வீதிகளில் தேரோட்டம் நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சென்னை: திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு உற்சவர் ஊர்வலத்தையும், தேரோட்டத்தையும் மாட வீதிகளில் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீப திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், கோவிலுக்குள் தேர் திருவிழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலைய துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர், தீப திருவிழாவை தவிர்த்து மற்ற நாட்களில் 5000 பேரை அனுமதிப்பதாக கூறும்போது, உற்சவ மூர்த்திகள் ஊர்வலமும், தேர் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒரு ஆண்டுக்கு அனுமதித்தால் அதுவே வழக்கமாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாடவீதிகளின் நுழைவு வழிகளை தடை செய்யலாம் எனவும் மக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீப திருவிழாவை ஒட்டி, 29ம் தேதி தவிர பிற நாட்களில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர் எனவும் கொரோனா காரணமாக உற்சவ மூர்த்திகளும், தேர் திருவிழாவும் கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நவம்பர் 29ம் தேதி பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை தெப்ப திருவிழா கோவில் வளாகத்துக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடத்தப்படும் எனவும், இந்த திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், டிசம்பர் 3ம் தேதி சண்டிகேஸ்வரர் விழாவுடன் முடிவுக்கு வருகிறது என்றார்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா: ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதி
ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் எனவும், அரசியல் காரணங்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கும் அரசு, மத ரீதியான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பதாக ரங்கராஜன் நரசிம்மன் குறை கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உற்சவர் ஊர்வலத்தையும், தேர் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுசம்பந்தமாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொதுநலனை கருதியே அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், அதை குறை கூற முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்த ஆண்டு முதல் இயல்புநிலை திரும்பி, கார்த்திகை தீப திருவிழாவும் வழக்கமாக நடக்கும் எனவும் தெரிவித்தனர்.