திருவண்ணாமலை எல்லையை தொட்ட பெருமாள் சிலை.. கலெக்டர் தண்ணீர் ஊற்றி வழிபாடு
பெருமாள் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சென்னை: பல ஊர் மக்களுக்கு சிரமம் கொடுத்தபடி பெங்களூர் நோக்கி பயணித்து வரும் கோதண்டராமர் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தபோது, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் கலெக்டர் கந்தசாமி!
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன.
திரும்பவும் சிக்கல்
பின்னர் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்து சென்றது. பிறகு செஞ்சிக்கோட்டை சுற்றுச்சுவரை இடித்த பின்னர் தான் எடுத்து செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் திரும்பவும் சிக்கல் வந்தது.
டயர்கள் வெடித்தன
எனவே சிலையின் அகலத்தை குறைத்து மாற்று பாதையில் பெருமாள் கொண்டு செல்லப்பட்டது. கடைசியாக 3 தினங்களுக்கு முன்பு பெருமாள் திருவண்ணாமலைக்கு வந்தது. அங்கும் சிக்கல் ஏற்பட்டு, லாரி டயர்கள் வெடித்தன. அதனை சரிசெய்யும் வேலை நடந்தது. நேற்று காலை, திண்டிவனம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்புகளை அகற்றும் பணி நடந்தது.
கலெக்டர் கந்தசாமி
அப்போது அந்த பணி முடியும்வரை ரிங்ரோடு பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி பெருமாளை கும்பிட அங்கு வந்தார். கூடவே தனது மகன்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள மாணவர்களுடன் அங்கு வந்தார். பின்னர், நகராட்சி சார்பில் குடிநீர் கொண்டு வரசெய்து, லாரியில் இருந்த பெருமாள் மீது ஊற்றினார்.
உண்டியலில் காணிக்கை
பெருமாளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். பிறகு, பிரம்மாண்ட கோதண்டராமருக்கு பிரம்மாண்ட மாலையை அணிவித்து காப்பக குழந்தைகளுடன் வழிபட்டார். பிறகு சாலை சரி செய்தபின்னர் லாரி அங்கிருந்து கிளம்ப முயற்சித்தது. ஆனால் சாலையில் உள்ள மண் பாதையில் திரும்பவும் லாரி சிக்கி கொண்டது. மண் பாதையில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடியும் லாரியை அங்கிருந்து மேற்கொண்டு நகர்த்தவே முடியவில்லை. அதனால் லாரி மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மண்பாதையில் சிக்கியது
இப்போது, இரும்பு தகடுகளை அங்கு அமைத்து, அதன்பிறகுதான் லாரியை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் மட்டுமல்லாமல், அந்த சுற்றுவட்டார பகுதி மக்களே பெருமாளை கண்டு களித்து கும்பிட்டு சென்றபடி உள்ளனர். போகும்போது, பெருமாளுக்கு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிற உண்டியலில் காணிக்கையும் போட்டுவிட்டு செல்கின்றனர்.