திருவாரூர் இடைத் தேர்தலை தடை செய்ய முடியாது.. ஹைகோர்ட் மறுப்பு
Recommended Video
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் , வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் திமுக, அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஒரு சில கட்சிகள் வேட்பாளரையும் அறிவித்து விட்டன. மற்ற கட்சிகள் நாளை, மற்றும் நாளை மறுநாள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இந்நிலையில் நேற்று, காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சத்திய நாராயணன் என்ற விவசாயி சார்பாக மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
முறைகேடுகள்
அதில், ''திருவாரூர் தொகுதியில் ஏற்கெனவே கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. தேர்தல் அறிவித்து விட்டால் நிவாரண பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் நடத்தினால் அதன்மூலம் நிறைய முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தலும் நியாயமாக நடைபெறாது.
அவசர வழக்கு
அதனால் திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரி காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என முறையிட்டார்.
மனு தாக்கல்
இதனை கேட்ட தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் கொண்ட அமர்வு, மனு தாக்கல் செய்யப்பட்டு நம்பர் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பியது. இதற்கு மனுதாரர் தரப்பில் இல்லை என பதில் அளித்தனர்.
ஒத்திவைப்பு
இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மனு தாக்கல் செய்த பின்பு தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகள் எந்த அமர்வு விசாரிக்கும் என்பது பிற்பகல் தெரிவிப்பதாக நீதிபதிகள் கூறினர். அதன்படியே பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாளை அதாவது இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்திருந்தனர்.
தள்ளுபடி
அதன்படியே இன்று விசாரணைக்கு இந்து வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. அதோடு இடைத்தேர்தலை தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அதிரடியாக சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.