ரே பரேலி, அமேதி போல மாறுமா திருவாரூர்?.. மக்களின் எதிர்பார்ப்பு என்ன??
Recommended Video
சென்னை: திருவாரூர் தொகுதியும் ரே பரேலி, அமேதி தொகுதி போல் மாறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் என்றாலே திருவிழா போல் களைகட்டும். அதிலும் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற வரலாற்றை ஆர் கே நகர் இடைத்தேர்தல் மாற்றி எழுதியது. தற்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் திமுகவும் கம்யூனிஸ்ட்களும் மட்டுமே என்பதால் திருவாரூர் திமுகவின் கோட்டையாகும். இந்த நிலையில் கருணாநிதியின் தொகுதி என்பதால் திமுகவின் கோட்டை என்பதாலும் இங்கு தோல்வியுற்றால் அதை விட அசிங்கம் திமுகவுக்கு இருக்க முடியாது.
அஸ்திரம்
ஆர் கே நகர் இடைத்தேர்தலை விட இந்த திருவாரூர் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முடிவுகள் நிச்சயம் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. மேலும் எதிர்க்கட்சியின் அரசியலை தீர்மானிக்கும் அஸ்திரமாகவும் இது இருக்கிறது.
திமுக வேட்பாளர்
அப்படியிருக்கையில் இந்த தொகுதிக்கு வெற்றிமுகம் இருக்கும் வேட்பாளரையே நிறுத்துவதில் அதிமுக, திமுக, அமமுக ஆகியன முனைப்பு காட்டும் என தெரிகிறது. திமுகவின் வேட்பாளர் யாராக இருக்கும் என கட்சியினரும் மக்களும் மண்டையை பிய்த்து கொள்கின்றனர். திருவாரூர் தொகுதியை பொருத்தவரை அங்கு கருணாநிதிக்கு நண்பர்களும் உறவினர்களும் அதிகம். கருணாநிதிக்கும் திருவாரூருக்குமான உறவு எம்எல்ஏ- தொகுதி என்ற அடிப்படையில் இல்லாமல் நட்பு- உறவு- சொந்தம் என்ற அடிப்படையில்தான் இருந்தது.
எதிர்பார்ப்பு
திருவாரூர் சென்றால் அங்குள்ள நண்பர்களையும் மக்களையும் உறவினர்களையும் பார்க்காமல் கருணாநிதி சென்னைக்கு திரும்பியதே இல்லை. எனவே இந்த தொகுதியில் கருணாநிதியின் குடும்பத்தினரே நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வேட்பாளர் ஸ்டாலினா
ஸ்டாலின் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் திருவாரூர் தொகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. திமுகவின் கோட்டை என்றாலும் ஒரு வேளை இந்த தேர்தலில் போட்டியிட்டு ஸ்டாலின் தோல்வி கண்டுவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை அவர் இழந்து விடக் கூடும். மேலும் தேசிய அரசியலை தீரமானிக்கும் சக்தியாக டெல்லி வரை பேசப்படும் ஸ்டாலினுக்கு இது நிச்சயம் அவமானகரமானதாக இருக்கும். இதனால் அவர் களமிறங்குவது சந்தேகம்தான் என தெரிகிறது.
உடன்பாடு இல்லை
சரி ஸ்டாலின் மனைவி துர்காவை எடுத்துக் கொண்டோமேயானால் அவர் திமுகவில் உறுப்பினர் இல்லை. ஏற்கெனவே திமுகவின் மீது வாரிசு அரசியல் என்ற முத்திரை உள்ளது. தற்போது உதயநிதியும் அரசியலில் குதித்துள்ளதால் தன் மனைவியை நிறுத்துவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது.
செல்விதான்
கருணாநிதி குடும்பத்தில் கட்சியில் உறுப்பினர் என்று பார்த்தால் கனிமொழியும் செல்வியும்தான். கனிமொழியின் எம்பி பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் இவரை வரும் மே மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கனிமொழிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை திமுக விரும்பவில்லை.
அமேதி
எனவே கருணாநிதியின் ஆசை மகள் செல்வி திமுக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே மற்ற வேட்பாளர்களையும் காட்டிலும் கருணாநிதியின் குடும்பத்தினரே களம் இறக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படி இந்திரா காந்தி களம் கண்ட ரேபரேலியில் சோனியாவும் ராஜீவ்காந்தியின் தொகுதியான அமேதியில் ராகுல்காந்தியும் தொடர்ந்து போட்டியிடுகின்றனரோ அது போல் திருவாரூரிலும் கருணாநிதியின் குடும்பத்தினரே போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நிறுத்தப்பட்டால் திருவாரூர் தொகுதியும் ஒரு ரே பரேலி, அமேதி போல் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.