திடீரென வேகம் குறைந்த தமிழிசை.. கம்மென்று இருக்கும் பாஜக.. திருவாரூரில் போட்டியா, இல்லையா?
Recommended Video
சென்னை: கூட்டி கழித்து பார்த்தால் திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்றே தெரிகிறது.
திருவாரூர் தேர்தலுக்கு பிரதான கட்சிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. ஆனால் சத்தமே இல்லாமல் இருக்கிறது நாட்டை ஆளும் பாஜக. குறிப்பாக மாநில தலைமை!!
திருவாரூர தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு கணமே தமிழிசை சவுந்தராஜன் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில் "திருவாரூரில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வாக்குகளாக அளிப்பார்கள்" என்று சொல்லி இருந்தார்.
ஆர்வம் இல்லையா?
இந்த ஒரு ட்வீட்டிலேயே ஓரளவு தெரிந்துவிட்டது அவர் போட்டியிடுவாரா, மாட்டாரா என்று.
பிறகு செய்தியாளர்களும் நேரடியாகவே கேட்டுவிட்டார்கள், போட்டியிட போகிறீர்களா என்று. ஆனால் இதுவரை போட்டியிடுவதாக உறுதியாக எதுவும் சொல்லவில்லை. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிவிட்ட நிலையில், போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என ஒரு கட்சி கூறுவது அது போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்பதைதான் தெளிவுபடுத்துகிறது.
ஏன் தயக்கம்?
போட்டியிட்டால் விளைவுகள் ஆர்.கே.நகர் போல இருக்குமா? அல்லது அதைவிட மோசமாக இருக்குமா? என பாஜக தயங்குகிறதா என தெரியவில்லை. ஆனால் ஸ்டாலினின் ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலடி கொடுத்து கொண்டிருந்த தமிழிசை இந்த விஷயத்தில் மட்டும் ஸ்டாலினை எதிர்க்க தயங்குவது ஏன் என விளங்கவில்லை.
கேள்வி எழுப்புகின்றனர்
தமிழகத்தில் பாஜக வீழ்ச்சியடையவில்லை, மோடி அலை குறையவில்லை, வெற்றிகரமான தோல்வி என்றெல்லாம் இதுநாள் வரை பேசி வந்த தமிழிசை சவுந்தராஜன், திருவாரூர் தேர்தல் விஷயத்தில் "ஆஃப்" ஆகி கிடப்பது ஏன் என நெட்டிசன்களே கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதோடு, துணிவிருந்தால் திருவாரூர் தொகுதியில் நின்று பாஜக ஜெயித்து காட்டட்டுமே என்று பகிரங்க சவாலும் எழுப்பி வருகின்றனர்.
கருணாநிதி தொகுதி?
இதற்கெல்லாம் தமிழிசை சவுந்தராஜன் என்ன பதில் சொல்ல போகிறார்? ஒருவேளை மறைந்த கருணாநிதியின் தொகுதி என்பதால் அதற்கு மதிப்பளித்து ஒதுங்கி இருக்கிறாரா? அல்லது கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவிப்பாரா? என தெரியவில்லை. ஆனால் ஒரு தொகுதியில் நிற்பதற்கே இவ்வளவு யோசனையும், தயக்கமும் இருக்கும்போது, வரப்போகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எப்படி பாஜக எதிர்கொள்ளும் என்ற சாதாரண, அடிப்படை, யதார்த்த கேள்வி மக்களுக்கு எழுந்து செல்லாதா?
மாநில தலைமை
எனவே திருவாரூர் இடைத்தேர்தலை தமிழக பாஜக சந்திக்க வேண்டும், தமிழகத்தில் அக்கட்சிக்கு மக்கள் என்ன மரியாதை, என்ன செல்வாக்கை, என்ன பெயரை, என்ன மதிப்பை எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை குறைந்தபட்சம் மாநில தலைமையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
வெறும் பேச்சுதானோ?
அப்போதுதான் வரப்போகிற பெரிய பெரிய தேர்தல்களை சரியான விதத்தில் கையாண்டு, அதற்கான வியூகத்தையும் அமைக்க முடியும். இல்லையென்றால், தமிழிசை ட்விட்டரில் ஸ்டாலினிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது வெறும் பூச்சாண்டியா என்றும், "பேச்சு வெறும் பேச்சாகத்தானா?" என்றும் தமிழக மக்கள் நினைத்துவிடுவார்கள்.