குடிநீர் பஞ்சத்தை போக்க அதிக நிதி ஒதுக்கீடு... அசத்தும் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
சென்னை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்க அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில், மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் குடிநீர் பஞ்சம் ஓய்ந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதுடன், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முன்னுரிமை அளித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடராஜபுரம், குண்டூர் உள்ளிட்ட கிராமமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி அன்பில் மகேஷிடம் முறையிட்டனர்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அன்பில் மகேஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்ட மதிப்பீட்டிற்கு தேவையான தொகையை ஒதுக்கி சம்மந்தபட்ட கிராமங்களின் தேவைக்கேற்ப ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைத்துக்கொடுத்துள்ளார்.
இதனிடையே அந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்ததை அடுத்து அதனை நேரில் பார்வையிட்ட அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, ஆழ்த்துளை கினறு உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார். மேலும், அடுத்த 6 மாதத்திற்குள் தனது தொகுதியில் குடிநீர் பிரச்சனையை முற்றிலும் களைய பல்வேறு திட்டங்களை தயார் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் தான் அவருக்கு போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை எனவும் கூறப்படுகிறது.