கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்!
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது யானைகள் கும்பலாக நின்று நீர் அருந்தும் புகைப்படம் ஒன்று.
சென்னை: கண்களை மட்டும் நம்பாமல், கொஞ்சம் மூளையையும் பயன்படுத்தி, இந்த புகைப்படத்தில் எத்தனை யானைகள் இருக்கிறது என்பதை சரியாக கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
'இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன', 'இதில் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடியுங்கள்' என்பது போன்ற புதிர் விளையாட்டு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது யானைகளின் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் நான்கு யானைகள் வரிசையாக நின்று ஒரு நீர் நிலையில் தண்ணீர் குடித்துகொண்டிருக்கின்றன.
கசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால 'அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்!
மொத்தம் ஏழாம்...
முதலில் ஒரு குட்டி யானையும், அதற்கு அடுத்தடுத்து வரிசையாக மூன்று பெரிய யானைகளும் என நான்கு யானைகள் மட்டும் தான் பார்வைக்கு தெரிகிறது. ஆனால், உண்மையில் அதில் நான்கு யானைகள் மட்டும் இல்லை. மொத்தம் ஏழு யானைகள் இருக்கின்றன என்கிறது அந்த புகைப்படத்தை வெளியிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்.
நல்லா உத்துப் பாருங்க..
மேலோட்டமாக பார்த்தால் நான்கு யானைகள் தான் நம் கண்ணுக்கு தெரியும். ஆனால் சற்று உற்று கவனித்தால், இரண்டு குட்டியானைகளும் கண்ணுக்கு புலப்படும். அவை இரண்டும் பெரிய யானைகளுக்கு நடுவே நின்றபடி நீர் அருந்துகின்றன.
வீடியோ விளக்கம்
ஆனால் அந்த ஏழாவது யானை யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அது பெரிய யானைக்கு நடுவே உள்வாங்கி நிற்பதால் முழுமையாக மறைந்துவிட்டது. யானைக்குட்டிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கேள்விகளால் துளைத்த நெட்டிசன்களுக்கு வீடியோ மூலம் விளக்கமாக பதில் அளித்திருக்கிறது அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்.
சேட்டைக்கார குட்டிகள்
அதில் கும்பலாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்குகின்றன. புகைப்படம் அப்படியே வீடியோவாக மாறுவது போல் அழகாக இருக்கிறது அந்தக் காட்சி. மெல்ல மெல்ல நகரும் யானைகளைக் கவனிக்கும் போது தான், பெரிய யானைகளுக்கு நடுவே குட்டி யானைகள் இருப்பது தெரிகிறது.
அழகான புகைப்படம்
அந்த புகைப்படத்தில் எத்தனை யானைகள் இருக்கிறது என்பது தான் விஷயமாக இருந்தாலும், அந்த யானைகள் ஒருசேர நீர் அருந்துவதை பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது. ஒரே வரிசையில் ஓவியம் போல் அவை நீர் அருந்துகின்றன. உண்மையில் இதுவும் ஒரு அதிசய புகைப்படம் தான்.