சென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.. ரியல் எஸ்டேட் நிபுணர்கள்
Recommended Video
சென்னை: வீடு மனை வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரம் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள். கட்டி முடிக்கப்பட்ட ஏராளமான வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால் குறைந்த விலைக்கு வீடுகள் வாங்க வாய்ப்புகள் தற்போது உருவாகி உள்ளதாம்.
பொருளாதர மந்த நிலை காரணமாக ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பலர், தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்கள். தற்போது புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கவில்லை.
வீடுகள் விற்பனை மந்தம் என்பது தற்போது முன்பைவிடஇரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாம். இதனால் வீடுகளை நஷ்டத்திற்கு விற்றுவிட வேண்டிய நிலையில் பில்டிங் புரோமோட்டார்கள் உள்ளார்கள். சென்னையில் மட்டும் தற்போது சுமார் 90 ஆயிரம் முதல் ஒருலட்சத்துக்கும் அதிகமாக வீடுகள் விற்கப்படாமல் இருப்பதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியில் கூறியுள்ளார்.
கட்டுமானத்துறையில் கடந்த சில ஆண்டுகளி பல ஆயிரம் பேர் வேலையை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர்கள், மண் எடுப்பவர்கள், கம்பி கட்டுபவர்கள், எலக்ட்ரீசியன், டைல்ஸ் ஒட்டுபவர், ஆசாரிகள், இன்டிசைன் பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி, பில்டிங் பிளான் அப்ரூபவல் வாங்குவதில் ஏற்படும் தாமதம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகள் கட்டுவதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதர மந்த நிலை காரணமாக மக்கள் நிரந்தர வேலைகள் இன்றி வருமானம் இழந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக மக்களால் வீடுகள் வாங்க முடியவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. இதனிடயே வீடுகள் வாங்க ஆசைப்படுவோர் இந்த தருணத்தில் முயன்றால் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும் என்கிறார்கள்.