திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
திட்டமிட்டு காய் நகர்த்திய திமுக.. துரைமுருகனை வைத்து தேமுதிகவில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் கொடுத்த ஒரே ஒரு பேட்டியால் தேமுதிகவின் கூட்டணி கனவு, அரசியல் திட்டங்கள் எல்லாம் கலைந்து போய் இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதிமுகவுடன் தேமுதிக இணையுமா, கூட்டணி ஒப்பந்தம் முடிவாகுமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று திமுக செய்த சில அரசியல் சதுரங்கம் காரணமாக தேமுதிக பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் கொடுத்த ஒரே ஒரு பேட்டி தேமுதிகவை பெரிய பிரச்சனைக்கு உள்ளாக்கி உள்ளது.
இரண்டு இடங்களிலும் பேசினார்
நேற்று அதிமுகவுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதே சமயம் திமுகவுடனும் அவர் பேசினார். திமுக துரைமுருகனிடம் போன் மூலம் பேசி இருக்கிறார் சுதீஷ். நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வர தயார் என்று துரைமுருகனிடம் அவர் பேசி இருக்கிறார்.
என்ன சொன்னார்
ஆனால் இந்த போன் பேசிய விவரத்தை துரைமுருகன் வெளிப்படையாக வெளியே கூறினார். இப்படி எனக்கு சுதீஷ் போன் செய்தார். நான் கூட்டணி எல்லாம் முடியாது என்று கூறிவிட்டேன். ஸ்டாலினுக்கு போன் செய்தேன். அவர் தூங்குவதாக சொன்னார்கள். எழுப்ப வேண்டிய அளவுக்கு முக்கியமான விஷயம் இல்லை என்று விட்டுவிட்டேன், என்று தேமுதிகவை கடுமையாக கிண்டல் செய்து துரைமுருகன் பேட்டியளித்தார்
ஸ்டாலின் சொல்லித்தான்
திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் இந்த அத்தனை விஷயங்களும் நடந்ததாக கூறுகிறார்கள். விஜயகாந்த் வீடு வரை சென்று ஸ்டாலின் பேசினார். ஆனால் அப்போது தேமுதிக பிடி கொடுக்கவில்லை. இதனால் தேமுதிகவின் தயவு வேண்டாம் என்று நினைத்தவர், இப்படி நேரடியாக துரைமுருகனை மட்டும் பேசவிட்டு இருக்கிறார். வேண்டும் என்றேதான் அவர் தேமுதிகவை தவிர்த்தார் என்கிறார்கள்.
சீட்
திமுகவை காரணம் காட்டித்தான் தேமுதிக, அதிமுகவிடம் நிறைய இடங்களை கேட்டுக் கொண்டு இருந்தது. திமுகவை சுட்டி காட்டி நாங்கள் அங்கே சென்று விடுவோம் என்று தேமுதிக கூறியது. எங்களுக்கு திமுக 5 இடங்களுக்கும் மேல் கொடுக்கும் என்றும் தேமுதிக அதிமுக தலைகளிடம் கூறி இருக்கிறது. இதனால் அதிமுகவிடம் முடிந்த அளவு தேமுதிக அதிக இடங்களை பேரம் பேசியது.
தேமுதிக பாவம்
இப்போது துரைமுருகன் பேச்சு காரணமாகவும், திமுகவின் நிலைப்பாடு காரணமாகவும் தேமுதிக பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. திமுகவின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது என்பது அதிமுக தொடங்கி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இப்போது தேமுதிகவுக்கு இருக்கும் ஒரே வழி அதிமுக மட்டுமே. வேறு எங்கும் செல்ல முடியாது.
கொடுப்பதை வாங்க வேண்டும்
இதுவரை அதிமுகவை பின்னே வரும்படி தேமுதிக அலையவிட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் தற்போது தேமுதிகவை அதிமுக அலையவிடும் நேரம் வந்து இருக்கிறது. இனி அதிமுக எத்தனை இடங்களை கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது.