திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை, வாரிசுகளுக்கு வாய்ப்பு.. இரண்டுக்கும் கமல்ஹாசன் சொன்ன 'நச்' பதில்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். 21 வேட்பாளர்கள் பெயர்கள் அதில் வெளியிடப்பட்டன.
அதன்பிறகு நிருபர்களிடம் கமல்ஹாசன், வரும் 24ம் தேதி எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையும், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும் என்றார்.
21 வேட்பாளர்கள் பெயரை அறிவித்த கமல்.. மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
தேர்தல் அறிக்கை
நீங்கள் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற நிருபர் கேள்விக்கு, அதுவும் 24 தேதி அறிவிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: குடிநீர் துவங்கி, கல்வி, மருத்துவ வசதி உள்பட பல மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். எங்கள் கட்சியிலிருந்து நிறைய பேர் வெளியேறவில்லை. ஒருவர்தான். அவர் வெளியேறாவிட்டால் நாங்களே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்போம்.
சின்ன வயசு
திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்துள்ளீர்கள். அதில் உங்களை ஈர்த்த வாக்குறுதி எது என்ற நிருபரின் கேள்விக்கு, எனக்கு சின்ன வயசுலயே அவை ஈர்த்த வாக்குறுதிகள்தான். அதே வாக்குறுதிகளைத்தான் திரும்பவும் அவர்கள் சொல்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே முக்கியம். அதை மக்கள் நீதி மய்யம் செய்ய முற்படும்.
நல்ல வேட்பாளர்கள்
நல்ல வேட்பாளர்களை நேர்காணல் செய்ய காலதாமதம் ஆகிவிட்டது. ஜனநாயக முறையில் நிறைய கட்டங்களாக சோதித்து, வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறோம் என்றார்.
மகன்
அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே என்ற நிருபர்கள் கேள்விக்கு, பதிலளித்த கமல்ஹாசன், முன்பு சொல்வார்கள் Land of the rising sun என்று, இப்போ ஸ்பெல்லிங்கை மாற்றிவிட்டனர். Sun இல்லை, இப்போ, son என்றார் கமல்ஹாசன்.