ராஜேஷ்தாஸ் மீது புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டுவதா? - சிபிஐ விசாரணை கோரும் எம்.பிக்கள்
பாலியல் புகாருக்கு ஆளான ராஜேஷ்தாஸ் மீதான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழியும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: பாலியல் புகாருக்கு ஆளான ராஜேஷ் தாஸை பணி இடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழியும், காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியும் வலியுறுத்தியுள்ளனர். பாலியல் புகார் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக சிறப்பு டிஜிபியாக பணிபுரிந்து வந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு, ராஜேஷ்தாஸை டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
ராஜேஷ்தாஸ் மீதான புகாரை விசாரிக்க குழு அமைத்திருப்பதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது.
பணியிடங்களில் பெண்கள் பாலியல் புகார் கூறினால் அது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம்.
ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? - ஹைகோர்ட் நீதிபதி வேதனை
பாலியல் புகாரை விசாரிக்க குழு
ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு காரணங்களை இந்த விசாகா கமிட்டி திரட்டி வருகிறது.
வழக்குப் பதிவு
இந்த நிலையில் ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி விரைவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையை தொடங்க உள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்
ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கச் சென்ற போது அவரை பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தடுத்து நிறுத்தியதாகவும் அவருடன் 150க்கும் மேற்பட்ட காவலர்களும் இருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் தனக்கு நேர்ந்த சம்பவத்தை டிஜிபி திரிபாதியிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி.
புகாரை விசாரிக்கும் விசாரணை அதிகாரி
ராஜேஷ் தாஸ் மீதான புகாரை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிக்கிறது. இந்நிலையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ விசாரணை தேவை
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மிரட்டப்படுவது வெட்கக்கேடானது என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை நாங்கள் விரும்புவதால் டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெட்கக்கேடானது
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபி யை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். உடனடியாக விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.