தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க பாஜக விரும்பினால்.. இதையெல்லாம் செஞ்சாகணும்!
Recommended Video
சென்னை: தமிழக மக்கள் முழுமையாக பாஜகவை கை விட்டுள்ளனர். அதேபோல அதிமுகவும் மக்கள் மனதில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. அதிமுக திருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பாஜக தன்னைத் திருத்திக் கொண்டால் அதற்கு தமிழகத்தில் எதிர்காலம் உள்ளது. அதற்கு அது செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.
ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே மாதிரியாக பார்க்கும் தவறை தொடர்ந்து தேசியக் கட்சிகள் செய்து வருவதே அவை நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பை பெற முடியாமல் போனதற்கு ஒரு முக்கியக் காரணம். அதைத் தொடர்ந்து பிராந்தியக் கட்சிகளைப் புறக்கணிக்கும் மனோபாவம் இன்னொரு காரணம்.
அதை விட முக்கியம், மாநில நலன்களைத் தூக்கி தூரப் போட்டு விட்டு, நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் வேண்டுமானால் நம்பலாம், ஆனால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதற்கு இந்த லோக்சபா தேர்தல் தீர்ப்பே சிறந்த உதாரணம்.
பாஜக பின்னணி
தமிழக மக்களை புரட்டிப் போட்ட பிரச்சினைகளை அடுக்கினால், கிட்டத்தட்ட 90 சதவீத பிரச்சினைகளின் பின்னாலும் மத்திய பாஜக ஆட்சி இருப்பதை மறுக்க முடியாது, மறக்க முடியாது. மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், காவிரிப் பிரச்சினை, 8 வழிச்சாலை,. கெய்ல் குழாய் பதிப்பு, தமிழக வேலைகளில் இந்திக்காரர்களை கொண்டு வந்து திணிப்பது, நீட் என இந்தத் திட்டங்கள் வெகு நீளமான பட்டியலைக் கொண்டவை.
காவிரியில் பெரும் தவறு
இந்தத் திட்டங்களில் மத்திய அரசு அதாவது பாஜக மத்திய அரசு கடும் பிடிவாதம் காட்டி வருகிறது. காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது. மக்களின் கூப்பாடுகள், காவிரி டெல்டா மக்களின் கதறலை மத்திய அரசு புறக்கணித்தது. அதை இங்குள்ள பாஜக தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. மாறாக மத்திய பாஜக அரசு செய்தது சரியே என்று ஒத்துப் பாடினர். இது முதல் மாபெரும் தவறு.
தமிழகத்திற்கு பாதகமாக
காவிரி நீரைத் தராத கர்நாடக அரசைக் கண்டிக்காமல், கோதாவரி நீரை கொடுப்போம் என்று மத்திய பாஜக அரசு கூறுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. காரணம், காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை தமிழகம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக மத்திய அரசுகூறுவதைப் போல இது உள்ளது. பிறகு எதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டங்கள்
மக்கள் எதிர்த்து வரும் இன்னொரு முக்கியத் திட்டம் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள். இந்தத் திட்டத்தையும் மக்கள் விரோத செயலாக மாற்றியுள்ளது மத்திய பாஜக அரசு. நாட்டு நலன் என்று சொல்லிக் கொண்டே உள்ளூர் வாழ்வாதாரத்தை அழித்து பிச்சைக்காரர்களாக மாற்றும் மத்திய அரசின் செயல் மக்களை உலுக்கி விட்டது. விளைவு,, அழுத்தமாக வாக்களித்து விட்டார்கள். மக்கலை மதிக்காத இந்த செயல் இன்னொரு தவறு.
வேதாந்தா ஆதரவு போக்கு
மக்கள் எந்த வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடியில் தங்களது இன்னுயிர்களைப் பறி கொடுத்தனரோ அதே வேதாந்தா நிறுவனத்திற்கு எரிவாயு தொடர்பான ஆய்வு செய்யும் அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இது தமிழக மக்களை மேலும் அதிர வைத்துள்ளது. தெரிந்தும் இதுபோல மத்திய பாஜக அரசு நடந்து கொள்வத மக்கள் மனதில் பாஜக மீதான அதிருப்தி, வெறுப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
8 வழிச்சாலைத் திட்டம்
8 வழிச்சாலைத் திட்டத்தை முழுமையாக கைவிடுவோம் என்று இதுவரை மத்திய அரசும் சொல்லவில்லை, மாநில அரசும் சொல்லவில்லை. மாறாக தமிழக முதல்வர் உயிர் முக்கியமா, சாலை முக்கியமா என்று கேட்டது தமிழக மக்களை உலுக்கியுள்ளது. இந்த சாலைத் திட்டத்தை கைவிட்டு விட்டு இருக்கும் சாலைகளை விஸ்தரிக்கும் செயலில் தமிழக அரசும், மத்தியஅரசும் ஈடுபட்டால் மட்டுமே மக்கள் மனதில் உள்ள வெறுப்பை போக்க முடியும்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
இவையெல்லாம் பெரும் பட்டியலில் சில திட்டங்களே.. இன்னும் மக்கள் மனதில் கசப்புடன் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவையெல்லாம் போக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் இந்த மண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை தமிழகமாக பார்க்க வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இங்கு கொண்டு வந்து திணித்தால் இவர்கள் ஏற்க மாட்டார்கள்.
தூக்கி வீசி விடுவார்கள்
தமிழக மக்களைப் புரிந்து கொண்ட கட்சியாக மாற பாஜக நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பு கிடைக்கும். உண்மையில் தமிழக மக்கள் நல்லதொரு மாற்றத்துக்காக பல காலமாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைத்து குளிர் காயத்தான் பல கட்சிகள் நினைக்கின்றன. அவர்களை மக்கள் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டாலும், உண்மை தெரிந்தால் நிரந்தரமாக தூக்கி வீசி விடுவார்கள் - உதாரணம் தேமுதிக.
மன முதிர்ச்சி தேவை
பாஜகவுக்கு வாக்களிக்கலைல்ல, உங்களுக்கு இனிமேல் ஒன்னும் கிடைக்காது என்ற ரீதியில் சில பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு சாபம் விட்டு வருகிறார்கள். தமிழர்கள் போர்க்குணம் மிக்கவர்கள். உரிமைக்காக உயிர் உள்ளவரை போராடக் கூடியவர்கள். அவர்களிடம் இந்த சாபமெல்லாம் கொஞ்சம் கூட பலிக்காது. மாறாக சிரித்துக் கொண்டு போய் விடுவார்கள். எனவே சிறுபிள்ளைத்தனமான இந்த பேச்சுக்களை விட்டு விட்டு முதிர்ச்சியான மன நிலைக்கு பாஜகவினர் மாற வேண்டும்.
கொண்டாடுவார்கள்
எனவே பாஜக அரசு தமிழக மக்களுக்கான, தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்ட திட்டங்களை நிறைவேற்றினால், உண்மையான உள்ளத்துடன் அதைச் செய்தால், தமிழக மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள், ஆதரிப்பார்கள்.. காரணம், தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் அல்ல. அது உலகம் அறிந்த ஒன்று. பாஜக புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள முன்வருமா..!
மதிச்சாதான் மதிப்போம்
தேசியத்தை மதிப்பதில் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகம்தான் முன்னோடி.. அதை பலமுறை நிரூபித்துள்ளது தமிழ்நாடு. எனவே தமிழகத்திற்கு எதையுமே யாருமே கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அப்படிப்பட்ட மாநிலத்தை எந்தக் கட்சி மதிக்கிறதோ, அந்தக் கட்சிக்கே மக்கள் ஆதரவும் கிடைக்கும். இதை பாஜக மட்டுமல்ல, காங்கிரஸ் உள்பட அனைத்து தேசிய கட்சிகளுமே புரிந்து கொண்டால் நல்லது.