தமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழகத்தைப் பொறுத்த அளவில் இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் என்பது பலவகைகளிலும் வித்தியாசமானது, தனிச்சிறப்பு மிக்கது.
இந்த நாடு மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல நாடுகளும், வலதுசாரி சிந்தனை தலைவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் பெரியார் வழியில் வந்த திமுக பக்கமாக மொத்தமாக சாய்ந்துள்ளது.
இது மட்டும் கிடையாது. மேற்குவங்கம் மற்றும் கேரளாவே கைவிட்டுவிட்ட, கம்யூனிசத்தை தூக்கி பிடித்துள்ளது தமிழகம். இங்கு மதுரை, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்
இடதுசாரிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளக்கூடிய கேரளாவில் கூட காங்கிரஸ் அலை வீசிக் கொண்டிருக்கிறதே தவிர அங்கு கம்யூனிஸ்டுகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும், லோக்சபாவுக்கு, இடதுசாரிகளை அனுப்பி வைக்கப்போகும், ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கப்போகிறது.
டிரெண்ட் மாற்றம்
இன்னொரு தனித்தன்மையையும் இந்த தேர்தலில் நாம் கவனிக்கலாம். பொதுவாக லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில், இடைத் தேர்தல் நடைபெற்றால், லோக்சபா தேர்தல் முடிவுகளை, ஒட்டிதான் சட்டசபை இடைத்தேர்தல் முடிவும் இருக்கும். ஆனால் இம்முறை 22 சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளில் திமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது. லோக்சபா தேர்தலில், திமுகவிடம், அதிமுக, மொத்தமாக சரண் அடைந்து விட்ட நிலையி,ல் இடைத்தேர்தலில் இதுபோன்ற ஒரு ட்ரெண்ட் இருப்பதும் இது புது அனுபவம் தான்.
எதிர் நிலை
பொதுவாக, தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவாக தான் லோக்சபா தேர்தலிலும், மக்கள் வாக்களிப்பார்கள். சில நேரங்களில் மட்டும் இது மாறியும் நடந்துள்ளது. இந்த தேர்தலிலும் அதுபோலத்தான். ஆட்சி கட்டிலில் அதிமுக இருந்தாலும், மக்கள் தேர்ந்தெடுத்து இருப்பது என்னவோ திமுகவை.
எழுத்தாளர்கள்
அதேபோன்று இந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றொரு தனித்தன்மையையும் நிறுவியுள்ளது. கனிமொழி, ஜோதிமணி, வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி முகத்தை காட்டி உள்ளனர் தமிழக மக்கள். ஒரே நேரத்தில் இத்தனை எழுத்தாளர்கள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.