ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை... கொரோனா கெடுபிடிகளால்... குர்பானி ஆடுகள் விற்பனை மந்தம்
சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கொரோனா கெடுபிடிகள் காரணமாக குர்பானி ஆடுகளின் விற்பனை மந்தமாகியுள்ளது.
ஆண்டுதோறும் மணப்பாறை, உளுந்தூர்பேட்டை, ஒட்டன்சத்திரம், அதிராமப்பட்டினம், தொண்டி, போன்ற இடங்களில் நடைபெறும் பக்ரீத் சிறப்பு ஆட்டுச்சந்தைகள் மூலம் கோடிகள் புரளும்.
ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாகவும் அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் காரணமாகவும் குர்பானி ஆடுகளின் விற்பனை மந்தமாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் ரபேல்...பறக்க பறக்க...இந்திய போர் கப்பலுடன் தொடர்பு!!
தியாகத் திருநாள்
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் 10-ம் தேதி கொண்டாடப்படும் இந்த பக்ரீத் பண்டிகைக்கு தியாகத் திருநாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் நபி அவர்களின் வழிமுறையை பின்பற்றும் விதமாக பக்ரீத் பண்டிகை அன்று கிடா ஆடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் மூன்று பங்காக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்கு முதல் பங்கும், உறவினர்களுக்கு இரண்டாம் பங்கும், ஏழை எளியோர் வறியோர்களுக்காக மூன்றாம் பங்கும் இறைச்சி பங்கிடப்படும்.
எடைக்கு தகுந்த விலை
பக்ரீத் பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழகம் முழுவதுமுள்ள ஆட்டுச்சந்தைகளில் விற்பனை களைக்கட்டத் தொடங்கும். ஆடுகளின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும். குறைந்தது பத்தாயிரம் ரூபாயில் தொடங்கி முப்பத்து ஐந்து ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். இதனால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு லாபகரமான வருவாய் ஈட்ட இந்தப் பண்டிகை பெரும் உதவியாக இருந்து வந்தது.
விற்பனை மந்தம்
ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கமும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள கெடுபிடிகளும் ஆடு விற்பனையை அடியோடு முடக்கியுள்ளது. தற்போது சந்தை கூட முடியாது என்பதாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது என்பதாலும் வந்த விலைக்கு ஆடுகளை விற்பனை செய்கின்றனர் விவசாயிகள். மேலும், கொரோனா எதிரொலியால் நகரங்களில் வசிக்கக்கூடிய பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்தாண்டு குர்பானி ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
கோரிக்கை
பக்ரீத் பண்டிகை அன்று திடல்களிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்துவது இஸ்லாமியர்களின் வழக்கம். கொரோனா கால ஊரடங்கு வரும் 31-ம் தேதி இரவுடன் முடிவடையும் நிலையில், அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மேற்குவங்கம், கர்நாடகம் மாநிலங்களை போல் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு அரைமணி நேரம் அனுமதி தர வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.