சசிகலா ரொம்ப "நுட்பமாக" அறிவித்துள்ளார்.. பின்னணியில் "அந்த அழுத்தம்.." திருமாவளவன் சொல்கிறார்
சென்னை: சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக இடையே இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை. இந்த நிலையில்தான் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் சசிகலா அரசியலில் இருந்து வெளியேறப்போவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து திருமாவளவன் தனது கருத்தை நிருபர்களிடம் தெரிவித்தார்.
உளவுத் துறை ரிப்போர்ட்.. முதலில் பதுங்கி பிறகு பாய அட்வைஸ்!- சசிகலா அறிக்கையின் பின்னணி என்ன?
கவனமான அறிக்கை
சசிகலா அம்மையார் அறிக்கை மிகுந்த நுட்பமாகவும், கவனமாகவும் உள்ளது. அதில் பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னுடைய உடல் நலம், மன நலம் கருதி அமைதியாக இருக்கலாம் என்ற நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதாவது மன அமைதிக்காக முடிவெடுத்திருக்கலாம்.
பாஜக நெருக்கடி
பாஜக ஏதாவது நெருக்கடி கொடுத்து, அழுத்தம் கொடுத்து இந்த முடிவை எடுத்திருக்க கூடும். அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை இணைப்பதற்கு தான் தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்து தொலைநோக்கு பார்வையுடன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
பொது எதிரி
எது எப்படி இருந்தாலும் திமுகவை பொது எதிரியாக கருதி ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வாய்ப்பாக இருக்கிறது. தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
சசிகலா பட்ட கஷ்டம்
திமுக கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. சசிகலாவும் அதையே சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இருவரும் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அது எதார்த்தமான உண்மை. பாஜக அழுத்தத்திற்கு பணிந்து போயிருந்தால் சசிகலா இத்தனை கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வந்து இருக்காமல் பாதுகாப்பாக இருந்திருக்கக்கூடும். எனவே இப்போது பாஜக அழுத்தத்துக்கு பணிந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.