திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தால் விசிகவின் முடிவு என்னவாக இருக்கும்.. திருமா பதில்
Recommended Video
சென்னை: பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் சனாதனக் கட்சிகள். எனவே இவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாமக திமுகவுடனும் அதிமுகவுடனும் கூட்டணி பேரங்களை நடத்துவதாக ஒரு பேச்சு எழுகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று அவ்வப்போது கூறிவந்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்ட பாமக, விடுதலை சிறுத்தைகள் திமுகவில் அங்கம் வகித்து போட்டியிட்டன. இந்த நிலையில் தருமபுரி மற்றும் காஞ்சிபுரத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு மற்றும் 2013-ஆம் ஆண்டு நடந்த ஜாதி மோதல்களில் இருவருக்கும் இடையே விரிசல் எழுந்தது.
விடுதலை சிறுத்தைகள்
தலித் இளைஞர்கள் பிற சமூக பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என தொல் திருமாவளவனும் காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணத்துக்கு எதிராக ராமதாஸும் பேசியுள்ளனர். இது அவர்களிடையே மோதலை அதிகரித்தது. இந்த நிலையில் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.
பாமக
அதில் அவர் கூறுகையில் அரசியல் ஆதாயங்களுக்காக விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக சமூக வெறுப்பை ராமதாஸ் உருவாக்கிவிட்டார். அவரது மகன் அன்புமணியின் தருமபுரி லோக்சபை தொகுதி வெற்றியை பாதுகாக்க அவர் இவ்வாறு செய்தார். எனவே பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.
திராவிடக் கட்சிகள்
சமூக நல்லிணக்கம் மற்றும் தருமம் குறித்து பாமகவினருக்கு கவலையே இல்லை. அவர்களுக்கு தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. திராவிடக் கட்சிகளை அழித்துவிட்டால் பாமகவால் தமிழகத்தில் வளர முடியும் என அக்கட்சி நம்புகிறது.
திமுக கூட்டணி
தற்போது அதிமுக ஏற்கெனவே வலுவிழந்துவிட்டது. எனவே திமுகவை வலுவிழக்க வைக்க பாமக விரும்புகிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் சட்டசபை தேர்தலின்போது திமுகவையே எதிர்ப்பர் என்று தொல் திருமாவளவன் தெரிவித்தார்.