மனுஸ்மிருதியை தடை செய்.. சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு வீர முழக்கமிட்டார்.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருமாவளவன் வீரமுழக்கமிட்டார். அது போல் சேலம் ஆட்சியர் அலுவலகம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதுபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. மனுஸ்மிருதியின் மனிதகுல விரோத கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன.
இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதனை கண்டித்தும் மனுநூலைத் தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதில் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் தமிழாதன், மாநில நிர்வாகிகள் அரசு, தங்கதுரை மற்றும் தோழமை கட்சிகள் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, பெரியார் திராவிட கழகத்தின் கழக பிச்சார செயலாளர் விடுதலைஅரசு, மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார், திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தில் மாவட்டத்தலைவர் ஆரோக்கியராஜ், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிலவழகன், மக்கள் அதிகாரம் செழியன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் ஜீவா, சரவணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகள் வழக்கறிஞர் சுபாசதீஷ், சந்தனமொழி, கனியமுதன், பொன்.முருகேசன், அல்பர்ட் ராஜ், வழக்கறிஞர் பழனியப்பன், சிறுத்தை சிவா, முசிறி ஏகலைவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.