ஸ்டெர்லைட் ஆலை.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ரெடியாகும் போராட்ட குழு.. தூத்துக்குடியில் உஷார் நிலை
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
கடந்த ஆண்டு, மே மாதம் 22ம் தேதி, பொதுமக்களின் தொடர் போராட்டம் நூறாவது நாளை எட்டியதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு, மக்கள் பேரணியாக சென்றனர்.
துப்பாக்கி சூடு
அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் இந்த துப்பாக்கிச்சூடு இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு மே மாதம் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அறைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டன. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது வேதாந்தா குழுமம். விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
பசுமை தீர்ப்பாயம்
தருண் அகர்வால் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று அறிவித்த நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மூன்று வாரங்களுக்குள் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, அதே நிலையில் தொடரலாம் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
போராட்டம்
இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்களில், ஒருவரான பாத்திமா பாபு கூறுகையில், நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் ஊரில் செயல்படவிடமாட்டோம். நீதிமன்ற அவமதிப்பாக இதை நான் கூறவில்லை. மக்களின் வாழ்வுரிமை தொடர்பான ஒரு கருத்தாக இதை கூறுகிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இனி, தீர்மானிப்போம். எங்களது எதிர்ப்பு தொடரும். நாங்கள் வாழ்வதா அல்லது இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதா என்ற சூழ்நிலையைத்தான், இந்த தீர்ப்பு எங்களை வைத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை நிச்சயமாக வரும். அது எந்தவிதமாக, எப்படி தொடரும் என்பது பற்றி, நாங்கள் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதைவைத்து பார்க்கும்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தூத்துக்குடியில் முன்னெடுக்கப்படும் என்ற சூழ்நிலை நிலவுவதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.