தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினிகாந்திடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தாலும் விசாரணை ஆணையம் கண்டிப்பாக அவரிடம் விசாரணை நடத்தும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் "சமூக விரோதிகள்"...ஆதாரம் இல்லாமல் பேசி விட்டேன்.. ரஜினி திடீர் பல்டி
விசாரணை ஆணையம்
இதுவரை நடைபெற்ற 27 கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
இந்தநிலையில் ஒரு நபர் கமிஷனின் 27 ஆவது கட்ட விசாரணை கடந்த 19ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் , ஒரு நபர் ஆணையத்தின் 27 வது கட்ட விசாரணையில் 48 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை பிரமாணப் பத்திரங்களாக அளித்துள்ளதாக கூறினார்.
719 பேரிடம் விசாரணை
இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 1052 பேருக்கு விசாரணை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 719 பேர் விசாரிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை 1126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை விசாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
வக்கீல் மூலம் ரஜினி பதில்
கொரோனா தொற்று பரவல் குறைந்தவுடன் நடிகர் ரஜினிகாந்திடம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒருநபர் ஆணையம் நிச்சயம் விசாரணை நடத்தும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ரஜினிகாந்திற்கு ஏற்கெனவே அனுப்பிய சம்மனுக்கு அவருடைய வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரஜினியிடம் ஆணையம் விசாரிக்கும்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எதேச்சையாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு. நடந்த சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்திற்கு தன்னிடம் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளார். இருந்தபோதும் ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் கண்டிப்பாக விசாரணை நடத்தும். தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தொற்று குறைந்த பிறகு ரஜினியிடம் விசாரணை நடைபெறும் என்று அருள் வடிவேல் கூறியுள்ளார்.