எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்.. அமைச்சர் வேலுமணி ஆதங்கம்
கஜா புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆதங்கம் தெரிவித்தார்.
சென்னை: கஜா புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆதங்கம் தெரிவித்தார்.
கடந்த 16-ம் தேதி தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பல ஏக்கரிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. கஜா புயலில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கண் முன்னே விவசாயம் நாசமானதை கண்டு, மனம் வெதும்பி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்வுகளும் நடந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். இருப்பினும், இன்னும் பல கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பலர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு 200 கோடி ஒதுக்கிய நிலையில், இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசியதாவது : புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி புயலின் வேகம் கடுமையாக இருந்தது.
முதல்நாள் கோபமாக இருந்த மக்கள் அமைச்சர்கள் அதிகாரிகளின் பணியால் அன்பை பொழிந்தனர் என்று கூறினார். நாட்டிலேயே குழாய் மூலம் குடிநீர் 99 சதவீதம் வழங்குவது தமிழகம் தான் என்றும், கஜா புயலின்போது ஊராட்சி துறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதால், மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர் எனவும் கூறினார்.