டெல்லியில் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு எதிரொலி- திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்
சென்னை: டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்தித்த ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக (Suspension) திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம். 1997-ல் அண்ணா திமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர். திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராகவும் இருந்து வந்தார் கு.க. செல்வம்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன், கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து தமக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் செல்வம். ஆனால் திமுக தலைமை, சிற்றரசுவை மேற்கு மாவட்ட செயலாளராக அறிவித்தது.
ரெயின்கோட் என நினைத்து.. போதையில் கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்ற 'குடிமகன்' !
இதில் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளார். இதன் முதல்கட்டமாக டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செல்வம் தாம் பாஜகவில் இணையவில்லை; பாஜக தலைவரை சந்தித்ததற்காக கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.
இதேபோல் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி (Suspension) வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் (Show Cause) கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.