அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவினரை குறிவைத்து 19 இடங்களில் தாக்குதல்- பரபர புகார்
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக அலுவலகங்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அமைதியான நிலை திரும்ப சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு தேவையான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சரகம் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்ணாமலை அவசர கடிதம்
கோவை, ஈரோடு, மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக பிரமுகர்கள் வீடுகள் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல்
அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், "பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை தங்கள் தலைமையின் கீழ் அரசு சிறப்பாக கையாண்டு நடவடிக்கை எடுத்து வருவதற்கு தமிழக பாஜக சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழக பாஜக அலுவலகங்கள் மற்றும் பாஜகவினர் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் புதிதல்ல என்பது உங்களுக்குத் தெரியும். தற்போது தமிழ்நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
வன்முறைகளுக்கு பின்னணி
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ)க்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். மேலும் தமிழ்நாட்டின் சுமார் 11 PFI தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்களிடையே பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக, பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள், கார்கள், அலுவலகங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு தீ வைப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
19 சம்பவங்கள்
தமிழ்நாட்டில் பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்களால் என சுமார் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையங்களில் காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரமாக பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் இதுவரை கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
தமிழக அரசுக்கு வழிகாட்டுங்கள்
இதில், வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஏற்கனவே 24.09.2022 அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்கவும், தமிழகத்தில் அமைதியான நிலை திரும்ப சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு தேவையான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சரகம் வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.