3 ஆண்.. ஒரு பெண்.. ஒரே பைக்கில்.. படு வேக ரைடு.. வேகமாக வந்து மோதிய வேன்.. 3 பேர் பலி!
பைக்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்
Recommended Video
மாமல்லபுரம்: 3 ஆண், ஒரு பெண் என 4 பேருமே ஒரே பைக்கில் ஈசிஆர் ரோட்டில் பறந்தனர்.. எதிரே வந்த வேன் மோதியதில், பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு அந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்!
சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி, மோகனா. டில்லிக்கு 19 வயது, மோகனாவுக்கு 15 வயதாகிறது.
நேற்றிரவு இவர்கள், மேலும் 2 இளைஞர்களுடன் ஒரே பைக்கில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் ஈசிஆர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
மாமல்லபுரம்
4 பேரும் வழியில் இருந்து ஒரு பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கினர். பிறகு அந்த பெட்ரோல் பங்கில் இருந்து பைக்கில் ரோட்டை வேகமாக கிராஸ் செய்தனர். அந்த நேரம் பார்த்து, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் ஒன்று பைக் மீது வேகமாக மோதியது.
மோகனா
இதில், டில்லி, மோகனா உள்பட 4 பேருமே பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே டில்லி, மோகனா, உடன் ஒரு இளைஞர் துடிதுடித்து உயிரிழந்தனர். இன்னொருவர் படுகாயங்களுடன் ரோட்டில் உயிருக்கு பேராடினார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த இளைஞரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சடலமாக உருக்குலைந்த மற்ற 3 பேரின் உடல்களையும் கைப்பற்றினர்.
விசாரணை
உயிரிழந்த இளைஞரும், உயிருக்கு போராடி கொண்டிருக்கும் இளைஞரும் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை என்பதால் விசாரணை நடந்து வருகிறது. அதேபோல, விபத்தை ஏற்படுத்திய டெம்போ வேன் டிரைவர் பாபுவிடம் விசாரணை நடக்கிறது.
தனி பைக்
கேனில், பெட்ரோல் வாங்கி உள்ளார்கள் என்றால், அனேகமாக இவர்கள் இன்னொரு பைக்கிலும் வந்திருக்கக்கூடும், அந்த பைக்கில் பெட்ரோல் இல்லாததால், 4 பேரும் ஒரே பைக்கில் வந்து பெட்ரோல் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அந்த பகுதிகளில் வேறு ஏதேனும் பைக் தனியாக நிற்கிறதா என்றும் போலீசார் தேடி வருகிறார்கள்.