மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு விவரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை ஆடிப்போக வைத்திருக்கிறதாம். மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் சேர்க்க வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வரிசையாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. கரூர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடுகள் வழக்கும் நிலுவையில் உள்ளது. ஆனால் இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான் என்கிறார் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எல்லாம் அங்க போய் கும்பிடுறாங்க!.. ஆமா முதல்வர் ஸ்டாலினா? இல்லை உதயநிதியா?.. கே பி முனுசாமி பொளேர்!
எடப்பாடி கையில் ஆவணங்கள்?
அத்துடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளையும் நாங்கள் கையில் எடுப்போம்; எங்களிடமும் ஆவணங்கள் இருக்கிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விவரங்கள், அதற்கான ஆவணங்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த விவரங்கள் டெல்லியிலும் கொடுக்கப்பட்டனவாம். இதனை வைத்து டெல்லி நடவடிக்கை எடுக்கும் என மலைபோல் நம்பி இருந்தாராம் எடப்பாடி பழனிசாமி. ஆனால் டெல்லி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாம். இதனால் அந்த ஆவணங்களை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசி வருகிறதாம்.
அதிர வைத்த வெளிநாட்டு முதலீடுகள்
இதனிடையே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கரூர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்களை ஆராய்ந்து முடித்திருக்கிறதாம். அதில், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் மலைக்க வைப்பதாக இருக்கிறதாம். எஸ்.பி,வேலுமணி மற்றும் கே.சி, வீரமணி ஆகிய இருவரின் வெளிநாடு முதலீடுகளை மட்டுமே தொகுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனியாக ஒரு ரிப்போர்ட் தரப்பட்டுள்ளதாம்.
வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு
இதற்கிடையே, கோவை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் விடப்பட்ட டெண்டர்களில் நடந்துள்ள முறைகேடுகளில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. டெண்டர் முறைகேடுகள் வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் அடிப்படையில்தான் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தி இருந்தனர்.
சிக்கும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
குறிப்பாக, கோவை மாநகராட்சி கமிஷ்னர்களாக இருந்த மூவரும் பணி காலத்தில் எஸ்,பி. வேலுமணி சொன்னதை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்களாம். இதனால் அந்த 3 அதிகாரிகளும் இப்போது சிக்கப் போகிறார்களாம். டெண்டர் முறைகேடுகளில் அந்த 3 அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதால், எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஒரு கோரிக்கை ஆட்சி தலைமைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.