பட்டையைக் கிளப்பிய அம்ருதா.. அதிரடி ராஷ்மி.. அரவணைத்து செல்லும் சுப்ரியா.. கலக்கும் 'பவர்கள்'!
சுப்ரியா, அம்ருதா, ராஷ்மி ஆகியோர் வலிமை மிக்க பெண்களாக உள்ளனர்
சென்னை: பெண்கள் எவ்வளவு வலிமை மிக்கவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், என்பதை தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களின் பின்னணி நடவடிக்கைகளில் நாம் தெளிவாக பார்க்க முடிகிறது!
சுப்ரியா அப்படி ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பார் என்று அஜித்பவார் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.. "கட்சியை விடுங்கள், பதவியை விடுங்கள் , குடும்ப உறவு என்னவாவது" என்று கேட்டதுமே பல சலசலப்பை ஏற்படுத்தியது அந்த கேள்வி!
சுப்ரியா இந்த 4 நாள் பட்ட தவிப்பு ஏராளம்.. ஆனால், பட்னாவிஸ் ராஜினாமா செய்த அடுத்த செகண்டே, சுப்ரியா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.. சுறுசுறுப்பாகிவிட்டார்.. தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்ட சபைக்கு வந்தனர். அவர்களை சுப்ரியா வரவேற்றுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பாஜகவுக்கு கூட்டணி அமைத்து, சரத்பவாருக்கு ஷாக் தந்த அஜித் பவாரும் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது, அஜித் பவாரை, சுப்ரியா சுலே இன்முகத்துடன் வரவேற்றார்.
மலர்ச்சி
சுப்ரியா முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.. சிரிப்பு.. ஆரத்தழுவி கொண்டார்.. இதில் சுப்ரியா மீது இருந்த கோபம் மறைய தொடங்கியது.. அஜித் பவார் காலில் விழுந்து சுப்ரியா ஆசியும் வாங்கி கொண்டார்.. அப்போது கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கோபமும் அஜித்பவாருக்கு போயே போச்சு! அது மட்டுமில்ல.. "அண்ணன் வந்தால் எதுவும் சொல்லிடாதீங்கப்பா.." என்ற சுப்ரியாவின் வேண்டுகோளுக்கு இன்னமும் வலிமை இருக்கவே செய்கிறது!
அம்ருதா
இதேபோலதான், பட்னாவிசின் மனைவி அம்ருதாவும்.. துணிச்சல் மிக்கவர்.. நவநாகரிக பெண்.. கலைநயம் இவருக்கு மிகவும் பிடிக்கும்.. டென்னிஸ் வீராங்கனை, பாடகி.. எம்பிஏ படித்தவர்.. ஆக்ஸிஸ் வங்கியின் துணை தலைவர்.. ஆனால், மிக சீரியஸான அரசியல் சமாச்சாரம் என்றால், பட்னாவிசுக்கு அம்ருதாவின் அட்வைஸ் அடிக்கடி தேவைப்படும்.. கணவருக்காக பிரச்சாரத்திலும் குதித்து களைகட்டுவார்.. இப்போது பட்னாவிஸ் ராஜினாமா செய்தபோதுகூட, "நாங்கள் திரும்பவும் புத்துணர்ச்சியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்" என அம்ருதா போட்ட ட்வீட், தம்பதியின் உறுதியான பலத்துக்கு சாட்சியாக தெரிந்தது.
தாக்கரே மனைவி
இன்னொரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண்.. ராஷ்மி.. உத்தவ் தாக்கரேவின் மனைவி..உத்தவ்-வுக்கு நேர் எதிர்தான் ராஷ்மி... அவரிடம் ஒரு மென்மை போக்கு இருக்கும் என்றால், ராஷ்மி அதிரடி அரசியல்தான்.. சிவசேனாவின் மூத்த தலைவர்கள் ராஷ்மியின் மதிப்பு மிக்க பேச்சினை காதுகொடுத்து கேட்பார்கள்.. அந்த புத்திசாலித்தனமான பேச்சை சிலசமயம் வழிமொழியவும் செய்வார்கள்.. இப்படி ஆட்சியில் இல்லாதபோதே கலக்கியவர் ராஷ்மி.. இப்போது, உத்தவ் முதல்வராக போகிறார்.. மகன் ஒரு பக்கம் எம்எல்ஏவாகி விட்டார்.. இனி கணவனையும், மகனையும் ராஷ்மி வீறு நடைபோட்டு அழைத்து செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
வலிமை மிக்க பெண்கள்
நித்தம் ஒரு கோலத்தில் காணப்பட்ட மகாராஷ்டிரா இன்று ஒரு சுமூக நிலைக்கு மாறியுள்ளது என்றால், சுப்ரியா, அம்ருதா, ராஷ்மியின் மறைமுக உதவியும்.. இவர்கள் 3 பேருமே அவர்களது குடும்பத்தினருக்கு இக்கட்டான, நெருக்கடியான ஒரு சூழலில் அளித்த வலிமையான, துணிச்சல்மிக்க ஆதரவும்தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது!