2017 லேயே நீட் மசோதா நிராகரிப்பை மறைத்தது யார்? பொய் சொல்வது யார்?
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாவை மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிராகரித்துவிட்ட நிலையில், இரண்டு வருடங்களாக அதை பற்றி வாய் திறக்காத மத்திய மாநில அரசுகளுக்கு மூன்று கேள்விகள்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதை நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு கட்டாயமாக்கியது.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வெளியில் சொன்ன மத்திய அரசு
ஆனால் இந்த மசோதா நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போதுதான் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட விவாகரம் வெளிச்சத்து வந்தது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசு கடிதம்
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தமிழக அரசின் நீட் மசோதா நிராகரிக்கப்பட்து தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அன்றைக்கு தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்த பூவைலிங்கத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் நீட் விஷயத்தில் வாய் திறக்காதது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் கடிதம் வரவில்லையா
2 ஆண்டுகளாக தமிழக மக்களை, ஒடுக்கப்பட்ட ஏழை மாணவர்களை நீட் விலக்கு தருவதாக கூறி ஏமாற்றியது மத்திய அரசா? மாநில அரசா?. அமைச்சர் சண்முகம், மத்திய அரசு பதலே தரவில்லை என்கிறார். அப்படி என்றால் மத்திய அரசின் 2017 கடிதம் இன்னமும் தமிழக அரசுக்கு வரவில்லையா? என்ற சந்தேகம் எழுகிறது.
வாய் திறக்கவில்லை
2017-ல் நீட் விலக்கு இல்லை என சொல்லிவிட்டோம் என்கிற பாஜக இதுநாள் வரை மவுனமாக இருந்தது எதனால்? தமிழக மாணவர்கள் மரணித்த பின்னரும் வாய் திறக்காதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நீட் விலக்கை பெற்றுத்தருவோம் என நம்ப வைத்து மத்திய மாநில அரசுகள் ஏமாற்றிவிட்டதாக தமிழக மக்கள் தற்போது விமர்சித்து வருகிறார்கள்.