வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு.. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு
சென்னை: நாட்டு மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நாளை நடைபெறுவதையொட்டி தேசம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களின் வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை போலீஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதே போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களின் உள்வளாகத்தில் காவல் அலுவலர்களும், வாக்கு எண்ணப்படும் அறைகள் உள்ள வளாகத்தில் ஆயுதமேந்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவிக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் மூன்றாயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
அதே போல வாக்கு எண்ணிக்கை நாளான நாளைய தினம், தமிழகத்தில் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2,500 போலீஸாரும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முன்பாக சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் 2,500 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது