இடி மின்னல்..அதிகாலையில் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை..தேங்கிய வெள்ள நீர்
சென்னை:சென்னையில் பயங்கர இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதிகாலை 4.50 மணியளவில் பயங்கர இடி இடித்து சென்னைவாசிகளின் தூக்கத்தை பறித்துக்கொண்டது. பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சேத்துப்பட்டு, சூளைமேடு, நுங்கம்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர், வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இடி மின்னலின் காரணமாக அயப்பாக்கம், அண்ணனூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: வானிலை மையம்
இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.