தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் மழை கொட்டுமாம்.. சென்னை வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல்காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
கொளுத்தும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.
வெப்பத்தை தணித்தது
இந்த மழை தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டாலும் வெப்பத்தை ஓரளவுக்கு தணித்தது. இருப்பினும் சென்னையில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டைக் காட்லும் இந்த ஆண்டு சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
வெப்பம் அதிகரிக்கும்
இந்நிலையில் தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், அதே சமயம் உள் மாவட்டங்களில் 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் மேகமூட்டம்
கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யக்கூடும்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, கோவை ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.