"முக்கிய அறிவிப்பு".. மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. தமிழகம் முழுவதும் பரவலாக மழை!
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழக மக்கள் அளவுக்கு அதிகமாகவே பயந்து போயுள்ளனர்.. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது.. அதனால் சில தினங்களுக்கு முன் இருந்ததைவிட இப்போது சமூக விலகலையும், ஊரடங்கையும் மிக மிக தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். எனினும் ஒருவித கலக்கத்திலேயே இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வெதர்மேன் ஒரு மகிழ்ச்சி தகவலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.. அதன்படி, ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் தொடங்கி 4 நாட்களுக்கு நல்ல மழை நமக்கு கிடைக்க போவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து 2 தினங்களுக்கு முன்பும் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை சம்பந்தமான தகவலை தெரிவித்திருந்தது. அதில், "தமிழகத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி என 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய போவதாகவும், 11-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துருந்தது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
Recommended Video
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. குமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் குறைந்திருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.