8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறுகையில், தமிழகம் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக வியாழக்கிழமை(இன்று) லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வெப்ப நிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டதுடன் இருக்கும். சென்னையில் அதிகபட்சமாக 93 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும் காணப்படும் என்று தெரிவித்தனர்.
இன்றைய அறிவிப்பு
இதனிடையே சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் "வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர். விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மழை
இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில் 2 செமீ மழை பெய்தது. கடலூர், பாம்பன்,பாபநாசம். பாண்டிச்சேரி. சீர்காழி உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு செமீ மழை பெய்துள்ளது.