சூறாவளி காற்று வீசும்... 6 மாவட்டங்களில் இடியோடு கன மழை பெய்யும் - வானிலையின் ஜில் அறிவிப்பு
பகல் நேரங்களில் வெயில் சுளீரென அடித்தாலும் மாலை நேரங்களில் இடியோடு மழை பெய்து வருகிறது.
சென்னை: வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பகல் நேரங்களில் வெயில் சுள்ளென அடித்தாலும் மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த நான்கு நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மதுரை,திருச்சி, சேலம் நீலகிரியில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 13 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. கரூர், நீலகிரியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் 7 செமீ மழை, பரமத்திவேலூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி,சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சின்ன வயசுல இதெல்லாம் எங்களுக்கு கிடைக்கிறது சாதாரணம் இல்ல 2கே கிட்ஸ்.. அது ஒரு சரித்திரம்!
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்யும். ஆகஸ்ட் 25ஆம் தேதி வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆகஸ்ட் 25 முதல் 29ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 2.5மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.