டிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா? பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப்
சென்னை: டிக் டாக் செல்போன் செயலிக்கு, மத்திய அரசு தடை விதித்த நிலையில் அதில் பிரபலமாக இருந்தவர்கள் வேறு 2 இந்திய செல்போன் செயலிகளுக்கு ஜம்ப் செய்துள்ளனர். இப்போது அங்கே, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களை கட்டிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
டிக் டாக், யூசி ப்ரவுசர் உட்பட 59 செயலிகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. இவை அனைத்தும் பயனாளர்களின் டேட்டாவை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இவை அனைத்துமே சீன நாட்டைச் சேர்ந்த செயலிகள் என்பதால் இந்தியாவின் பதிலடியாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஊரடங்கு, வேலைவாய்ப்பின்மை போன்றவை அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், மக்கள் தங்கள் பொழுதுபோக்குக்கு என்ன செய்வார்கள்.
இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா!!
இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் சுமார் 12 கோடி பயனாளர்களை கொண்ட டிக் டாக் இப்போது செயல்படாமல் இருக்கும் நிலையில், அதில் பிரபலமாக இருந்தவர்கள் மற்றும் தினமும் அதில் வீடியோக்களை பார்த்து ரசித்த மக்களுக்கு வேறு ஆப்ஷன் வேண்டாமா என்பதற்கான விடை இதுதான். இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரண்டு செயலிகள் டிக் டாக் தடைக்குப் பிறகு சக்கை போடு போட்டு வருகின்றன.
பெங்களூர் நிறுவனம்
இதில் ஒரு செயலி பெயர் சிங்காரி (Chingari). பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக், சுமித் கோஷ் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் கடந்த ஆண்டு இந்த செயலியை உருவாக்கி இருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 லட்சம் புதிய பயனாளர்கள் சிங்காரி செயலியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு மில்லியன் பார்வை பெற்று வருவதாக கூறுகிறது அந்த நிறுவனம். இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் 50 லட்சம் டவுன்லோடுகளை கடந்துவிட்டது சிங்காரி. விரைவிலேயே அது, ஒரு கோடி பயனாளர்களை எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் மொழியிலும் சேவை
டிக் டாக் போலவே, சிங்காரி செயலியிலும் பயனாளர்கள் தங்கள் வீடியோக்களை அப்லோடு செய்யலாம், டவுன்லோட் செய்யலாம், பிரவுசிங் செய்யலாம், ஷேர் செய்ய முடியும், தங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் வசதியும் உள்ளது. புதிய புதிய ஆட்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் இதில் உள்ளது. மேலும், டிரெண்டிங் செய்திகள் என்பது ஒரு பிரிவும் இதில் இருக்கிறது. ஃபன்னி வீடியோக்கள், காதல் கருத்துக்கள், வாட்ஸ்அப்க்கான வீடியோக்கள் என பல்வேறு பிரிவுகளில் இங்கு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் சிங்காரி தனது சேவையை செய்து வருகிறது.
பணம் கிடைக்குது பாஸ்
சிங்காரி செயலியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வீடியோ பதிவிடுவோருக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. எந்த அளவுக்கு வீடியோ அதிகம் பேரால் பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அதை பதிவேற்றம் செய்வோருக்கு பணம் கிடைக்கும். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பாயிண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த பாயிண்ட் பணமாக மாற்றிக் கொள்ளத்தக்கது.
முதலீடுகள் அதிகரிப்பு
பொழுதுபோக்கு என்ற பிரிவில், தற்போதைய நிலைமையில் கூகுள் பிளே ஸ்டோர் கணக்குப்படி, சிங்காரி ஆப் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு சிங்காரி செயலி மீது முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் அதிகம் பேர் வருகிறார்கள் என்று அந்த நிறுவனம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. அதேநேரம் திடீரென அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அவசரமாக பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது சிங்காரி நிறுவனம். விரைவில் சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு தொடர்ச்சியாக வீடியோக்களை தடையின்றி பார்க்கும் வசதி உருவாகி விடும் என்கிறது சிங்காரி.
ரொபோஸோ
இதேபோன்ற மற்றொரு வீடியோ ஆப் ரோபோஸோ. பல டிக் டாக் பிரபலங்கள் இங்கு ஆட்டம் போடுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காமெடி, வீட்டு ஆரோக்கிய குறிப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என 30 வகையான பிரிவுகளில் இதில் உள்ளடக்கம் கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் பொழுதுபோக்கு செயலியில் தற்போது இதற்கு நம்பர் 1 இடம் உள்ளது. 12 இந்திய மொழிகளில் இதன் சேவை வழங்கப்படுகிறது.
புதிய நிறுவனம்
ரோபோஸாவில் 14 மில்லியன் வீடியோ பதிவேற்றங்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் 80 மில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுவதாகவும் ரோபோஸோ செயலி கூறுகிறது. இந்த நிலையில்தான் ஜீ5 நிறுவனம், டிக் டாக் செயலிக்கு போட்டியாக HiPi என்பதை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஷேர் ஷாட்
மற்றொரு பக்கம் ஹலோ ஆப் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அதே போன்ற சேவைகளை வழங்கும் ஷேர் சாட் செயலி அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. 36 மணி நேரத்தில் 15 மில்லியன் பயனாளர்கள் ஷேர் சாட் டவுன்லோட் செய்தனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.