ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு.. ஐஎன்எக்ஸ் மீடியா கடந்து வந்த பாதை இதுதான்
சென்னை: 2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு, மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
2015- ஆக. 24: கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் இரு இயக்குநர்களுக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
மே 15, 2017: ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 2007 ஆம் ஆண்டில் ரூ .305 கோடி வெளிநாட்டு நிதியை ஐஎன்எக்ஸ் மீடியா பெறுவதற்கு, விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம், (எஃப்ஐபிபி) அனுமதி அளித்ததாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
2017 ஜூன்: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை சென்னை ஹைகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம், சி.பி.என்.ரெட்டி, ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ் மற்றும் பாஸ்கரராமன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.
2017 ஆகஸ்ட் 24: கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியது. இது முழுக்க ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான கேள்விகளாக அமைந்திருந்தது.
2018 பிப். 16: கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கமானவரும், அவரின் ஆடிட்டருமான பாஸ்கர் ராமன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
2018, பிப். 28: சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐயால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
2019, ஆகஸ்ட் 19: ஆகஸ்ட் 23ம் தேதி டெல்லியில் ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
2019, ஆகஸ்ட் 20: ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.