ஒத்த போஸ்டர்.. அங்குமிங்கும் பறந்த அமைச்சர்கள், 2 சிட்டிங், மூன்றரை மணி நேர பரபரப்பு.. நடந்தது என்ன?
சென்னை: ஒத்த போஸ்டர்.. தமிழகத்தில் சீனியர் அமைச்சர்களை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கும் மாறி மாறி ஓட வைத்துவிட்டது என்று சொல்லலாம்.
"அம்மாவின் ஆசி பெற்ற முதல்வர்" என்று தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி இன்று காலை ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இத்தனை களேபரத்திற்கும் காரணம்.
காலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதும் அரசியல் பரபரப்பும் ஆரம்பித்துவிட்டது.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை
காலை மணி 11.30
காலை மணி 11.30 மணி: துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தனர் மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், சிவி சண்முகம், கடம்பூர் ராஜு. தீவிர ஆலோசனை அரங்கேறியது. இந்த ஆலோசனை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மதியம் 1.30 மணி
இந்த ஆலோசனைக்கு பிறகு அப்படியே காரில் கிளம்பி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்குச் சென்றனர் அமைச்சர்கள். அங்கு முதல்வருடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை முடிவடையும்போது நேரம் மதியம் 1.30 மணி. இதோடு விஷயம் முடிந்ததா என்றால் இல்லை. அங்கிருந்து மறுபடியும் யூ டர்ன் போட்டு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு விரைந்தனர்.
3 மணிக்கு முடிந்த 2வது சிட்டிங்
அதாவது இரண்டாவது முறையாக பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர் சீனியர் அமைச்சர்கள். ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, காமராஜ் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன். இதன்பிறகு, அங்கே இருந்து கிளம்பி மறுபடியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவருடனும் இருமுறை சிட்டிங் போட்டு ஆலோசனைகளை நடத்தியுள்ளனர் அமைச்சர்கள்.
அருகருகே வீடுகள்
சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில்தான் எடப்பாடியார் மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவர் வீடும் அமைந்துள்ளது. இருவருமே நேரில் அமர்ந்து ஆலோசனை செய்திருந்தால் அமைச்சர்கள் அங்குமிங்கும் அலைந்து இருக்க தேவை இருந்திருக்காது. ஆனால் ஏனோ இருவரும் நேரடியாக ஆலோசனை நடத்தாமல், அமைச்சர்கள் அங்குமிங்கும் ஓடிச் சென்றனர்.
பத்திரிக்கையாளர்கள்
இது ஒரு பக்கம் என்றால்.. இரு வீடுகளின் வெளியேவும் பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். அமைச்சர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு செல்லும் போதும், அங்கிருந்தபடி நேரலை செய்ய வேண்டியதாயிற்று. சுதந்திர தினமும் அதுவுமாக, இப்படி அரசியல் சூறாவளி சுழற்றி அடிக்கிறதே என்று பத்திரிகையாளர்கள் நொந்து கொண்டதை பார்க்க முடிந்தது. ஆகமொத்தம் அடுத்தடுத்து அமைச்சர்களின் கார்கள் பறந்ததால், சுமார் மூன்றரை மணி நேரமாக பரபரத்து கிடந்தது கிரீன்வேஸ் சாலை.