கேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்
சென்னை: தமிழகம் மற்றும் கேரளா அரசியலை கதிகலங்க வைத்த சோலார் பேனல் மோசடி புகழ் நடிகை சரிதா நாயருக்கு இன்று கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரளா முதல்வராக இருந்த உம்மன்சாண்டியின் அதிகார அரசியலை அசைத்ததுடன் தமிழக பிரமுகர்கள் வரை பல பெருந்தலைகளை உருட்டி விட்டவர்.
2011-ம் ஆண்டு கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போதுதான் மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, சூரிய ஒளி (சோலார் பேனல்) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
சோலார் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உபகரணங்களை வாங்குவதற்கு கேரளா அரசு மானியமும் வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து நடிகை சரிதா நாயர் சோலார் மின்உற்பத்தி ஆடுகளத்தில் இறங்கினார்.
உம்மன் சாண்டியின் பெயரால்
தம்முடைய சோலார் மின் உற்பத்தி நிறுவனத்துக்குதான் முதல்வர் உம்மன் சாண்டி உரிமம் கொடுத்திருக்கிறார் என புதிய அவதாரத்துடன் கடை விரித்தார். நடிகை விரித்த கடையாயிற்றே... சரிதாவை நம்பி கோடி கோடியாய் பணத்தை கொட்டினர் தொழிலதிபர்கள்.
சரிதாவின் பட்டை நாமம்
சரிதா நாயரின் காட்டில் பணமழை கொட்டிக் கொண்டே இருந்தது. ஆனால் பணத்தைக் கொடுத்தவர்களுக்கு பட்டை நாமம் விழுந்து கொண்டே இருந்தது.. ஒருவருக்கு கூட சூரிய மின் உற்பத்தி மையம் அமைத்து தராமல் இழுத்தடித்தார் சரிதா.
விவகாரம் விஸ்வரூபம்
முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் பெயரை வைத்துக் கொண்டு வசூல் ராணியாக வலம் வந்தார் சரிதா. இதனால் அவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கவும் முன்வரவில்லை. ஆனால் விவகாரம் அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தை இடதுசாரிகள் கையில் எடுத்து கேரளாவை போராட்ட களமாக்கினர்.
உம்மன் சாண்டிக்கு நெருக்கடி
இதனால் உம்மன் சாண்டியே 2013-ல் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்தார். அசராமல் ஊடகங்களுக்கு தீனிபோட்ட சரிதா நாயரால் உம்மன் சாண்டிக்கு மட்டுமல்ல பல்வேறு பிரமுகர்களுக்கும் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
சரிதா நாயர் கோஷ்டி கைது
2016-ல் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். தமிழகம், கேரளாவில் சரிதா நாயர் மீது மொத்தம் 33 வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளில் சரிதா நாயரின் மாஜி கணவர் அல்லது மாஜி லிவிங் டூ கெதர் பார்ட்னர் என அழைக்கப்படும் பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதாவின் மோசடியின் பங்குதாரர்கள் என அலுவலக ஊழியர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர்.
கோவையிலும் கை வரிசை
இந்த சரிதாநாயர் தமிழகத்தின் கோவை வடவள்ளியிலும் ஐ.எம்.சி.எஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி வசூல் வேட்டை நடத்திய விவகாரங்களும் அம்பலமானது. தாம் கைது செய்யப்பட்ட நிலையில் உம்மன் சாண்டி தொடங்கி தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் வரை பலருக்கும் இந்த மோசடியில் பங்கு இருக்கிறது என்றார்.
பாலியல் குற்றச்சாட்டுகள்
தம்மை பாலியல் ரீதியாக அனுபவித்தவர்கள் பட்டியலில் உம்மன் சாண்டி தொடங்கி பலரது பெயரையும் சந்திக்கு கொண்டு வந்துவிட்டு செல்வாக்கை சரித்து விட்டார் சரிதா. ஏற்கனவே கேரளாவில் சரிதா நாயருக்கு இத்தகைய மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.
3 ஆண்டு சிறை தண்டனை
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயருக்கு கோவையில் ரூ28 லட்சம் மோசடி செய்த வழக்கில் இன்னொரு 3 ஆண்டு சிறை தண்டனை இன்று கிடைத்திருக்கிறது. பலரது அரசியல் சரித்திரங்களை புரட்டிப் போட்டுப் பார்க்க நினைத்த சரிதா ஆடிய ஆட்டத்துக்கு அடுத்தடுத்து தீர்ப்புகள் வேட்டு வைத்துக் கொண்டே இருக்கின்றன.
ஆடும்வரை ஆட்டம்!