"அரோகரா அரோகரா".. இப்படியாக எல். முருகனின் வேல் யாத்திரை.. இனிதே முடிவடைந்தது!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் வேல் யாத்திரை போலீசாரின் கைது நடவடிக்கையுடன் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மிக இழிவாக விமர்சித்தது. இதனையடுத்து கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் முருகன் விவகாரத்தை தமிழக பாஜக கையில் எடுத்து வருகிறது.
மேலும் நவம்பர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி அறுபடை வீடுகளுக்குமான வேல் யாத்திரையை நடத்துவோம் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார். ஆனால் இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது; இதனால் வன்முறைகள் நிகழும் என பாஜக எதிர்ப்பு கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
ப்ளாஷ்பேக்... தமிழகம் அதிர 1982-ல் கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் வைரவேல் நடைபயண யாத்திரை
ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
மேலும் தமிழக பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போதுதான், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
கோவிலுக்கு போகிறேன்
இந்நிலையில் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்துவோம் என தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இதற்காக திட்டமிட்டபடி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வேலை கையில் ஏந்தியபடி திறந்தவேனில் திருத்தணி நோக்கி புறப்பட்டார் முருகன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், முருகன் கோவிலுக்கு செல்வது எனது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.
5 வாகனங்களுடன் அனுமதி
இருந்தபோதும் திருத்தணிக்குள் செல்ல விடாமல் சென்னை எல்லையில் முருகனை தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனால் சென்னை அருகே நசரத்பேட்டையில் 300க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் திடீரென திருத்தணி நோக்கி முருகன் வாகனம் செல்ல போலீசார் அனுமதித்தனர். அவருடன் 5 வாகனங்கள் மட்டும் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் விளக்கம்
இதனால் தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் போலீசார் தரப்பிலோ, திருத்தணி கோவிலுக்கு செல்வதாக முருகன் விளக்கம் அளித்தார். அதனால் அவருடன் 5 வாகனங்களில் 20 பேர் மட்டும் செல்ல அனுமதித்திருந்தோம் என்றார். அதேபோல் ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தம் கடமையை செய்யும் என கூறியிருந்தார்.
திருத்தணியில் முருகன் கைது
இந்த சூழ்நிலையில் திருத்தணியை சென்றடைந்தார் முருகன். அங்கு முருகனுக்கு அரோகரா சரண கோஷங்களுடன் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கையில் வேலை ஏந்தியபடியே திருத்தணி முருகன் கோவிலில் முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வேல் யாத்திரையாக புறப்பட முருகன் தயாரானார். ஆனால் போலீசார், வேல் யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை என கூறி முருகன் உள்ளிட்ட பாஜகவினரை திருத்தணியில் கைது செய்தனர்.
எல்லோருக்கும் சாதகம்
பாஜக தலைவர் முருகன் யாத்திரை பயணத் திட்டத்தின் ஒருபகுதியாக சென்னை முதல் திருத்தணிக்கு வேலுடன் பயணம் செய்துவிட்டார். இதற்கு அனுமதி அளித்த போலீசார், முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதித்தோம் என்றது. இதனால் பாஜகவின் செயல் திட்டத்தில் ஒரு பகுதி வெற்றி பெற்றது. இன்னொரு பக்கம் திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை புறப்பட்ட முயன்ற முருகன் கைது செய்யப்பட்டார். இதன்மூலமாக தமிழக அரசு, வேல் யாத்திரைக்கு விதித்த தடையை செயல்படுத்திவிட்டோம் என நிரூபித்துவிட்டது. எல்லோருக்கும் சாதகமாய் அரோகரா கோஷங்களுடன் சுபமாய் முடிந்துவிட்டது வேல் யாத்திரை.