சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.. நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை : பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆர்ஜேடி, காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், பீகார் அரசியல் குறித்து, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனப் பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு
மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பீகார் ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் முதல்வராக ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்பது இது 8-வது முறையாகும். நிதிஷ் குமாரைத் தொடர்ந்து பீகார் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
புதிய கூட்டணி
பீகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் வீட்டுக்கு சென்று தேஜஸ்வி யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்ஜேடி, , காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
உடனடி திருப்பங்கள்
இதையடுத்து நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவுடன் மீண்டும் ஆளுநர் பகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தை நிதிஷ்குமார் ஆளுநரிடம் அளித்தார். இந்நிலையில் 8-வது முறையாக பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிதிஷ் பேச்சு
முதல்வர் பதவியேற்ற பின்னர் பேசிய நிதிஷ் குமார், "2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சியினர் கொடுத்த அழுத்தத்தாலேயே முதல்வரானேன். ஆனால், கட்சியினர் முந்தைய கூட்டணியில் என்ன மாதிரியாக ஒடுக்கப்பட்டனர் என்பதை நீங்களே பார்த்தீர்கள்.2015-ல் நாம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இப்போது நாம் எந்த எண்ணிக்கையில் இருக்கிறோம் என்று பாருங்கள்" எனப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் காக்கும் வகையில் சரியான நேரத்தில் பீகாரில் மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.