அரசியலுக்கே வராத ரஜினி முதல்வராக இத்தனை பேர் விருப்பமா?.. ஒரு வேளை டைம்ஸ் நவ் சர்வே பழசா இருக்குமோ!
சென்னை: அரசியலுக்கே வராத ரஜினிகாந்த் முதல்வராக 4.3 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பு கூறுகிறது. ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளதால் இந்த சர்வே கடந்த ஆண்டு டிசம்பருக்கு முன்னால் எடுத்திருக்கக் கூடும் என தெரிகிறது.
ரஜினிகாந்தே விட்டாலும் அரசியல் அவரை விடாது என்று சொல்லும் அளவுக்கு 25 ஆண்டுகளாக அவரை அரசியலுடன் அவரது ரசிகர்கள் தொடர்புபடுத்திவிட்டார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு அரசியல் வருவதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறி ஜனவரி 31 ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார்.
உடல்நிலை
இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கூட்டமான இடங்களுக்கு ரஜினிகாந்த் செல்லக் கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரை வழங்கினர். இதையேற்று தீவிர யோசனைக்கு பிறகு கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி தான் அரசியல் கட்சியை தொடங்கவில்லை என்று அவர் அறிவித்துவிட்டார்.
களநிலவரம்
இதனால் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்க சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினர். ஆனாலும் ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதனால் தலைவர் மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் இன்று களநிலவரமே வேறு மாதிரி இருந்திருக்கும் என ரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
ரஜினிகாந்த்
இது இவ்வாறு இருக்கும் நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு ரஜினிகாந்த் முதல்வராக எத்தனை பேருக்கு விருப்பம் என்ற தகவலை நேற்று வெளியிட்டது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டாமிடம், கமலுக்கு மூன்றாவது இடம், 4ஆவது இடம் ரஜினிகாந்திற்கு.
பழைய கருத்துக் கணிப்பு
அதாவது 4.3 சதவீதம் பேர் ரஜினி முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசியலுக்கே வராத ரஜினிக்கு எப்படி கருத்துக் கணிப்பு எடுத்தார்கள், மக்களும் வாக்களித்தார்கள்? ஒரு வேளை இந்த கருத்துக் கணிப்பு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் எடுத்திருந்ததாக இருக்கக் கூடும் என தெரிகிறது. கருத்துக் கணிப்பில் ரஜினி முதலிடமே பெற்றிருந்தாலும் அதனால் தற்போது ஒரு பயனும் இல்லையே என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.