பாஜக கூட்டணி 306 தொகுதிகளை வெல்லும்.. டைம்ஸ் நவ்-விஎம்ஆர் அதிரடி எக்ஸிட் போல் முடிவு
Recommended Video
சென்னை: டைம்ஸ் நவ்- விஎம்.ஆர் கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல்கள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், பல்வேறு டிவி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதில், டைம்ஸ்நவ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பாருங்கள்.
இக் கருத்துக் கணிப்பின்படி, மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி
பாஜக அணியான தேசிய ஜனநாயக கூட்டணி, 306 தொகுதிகளை வெல்லும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இது பாஜக கூட்டணி ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் தருவதாக இந்த எக்சிட் போல் அமைந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 132 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என இந்த சர்வே கூறுகிறது. இதன்படி காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையை காட்டிலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிகிறது.
பிற கட்சிகள்
இதர கட்சிகள் 132 தொகுதிகளை வெல்லும் என இந்த சர்வே கூறுகிறது. 'மகா கட்பந்தன்' என்று அழைக்கப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் சேராத மற்றும் பிற கட்சிகள் இந்த பிரிவில் வருகின்றன.
வாக்கு சதவீதம்
வாக்கு சதவீதம் அடிப்படையில், பாஜக அணி 41.1% வாக்குகளையும், காங்கிரஸ் அணி 31.7% வாக்குகளையும், இதர கட்சிகள் 27.2% வாக்குகளையும் பெறக்கூடும் என்று சொல்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.