திடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார்? பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து உடைத்தது தாங்கள்தான் என்று கூறி சுபாஷ் பண்ணையார் பேசுவதை போல வாட்ஸ்அப்களில் வலம் வரும் வீடியோ தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவர் சமீபத்தில், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தட்டார் மடம் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.
இந்த படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான, அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி
அனிதா ராதாகிருஷ்ணன் கார்
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான, உடன்குடி அடுத்த, தண்டுபத்து கிராமத்தில், அவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
சுபாஷ் பண்ணையார்
இந்த நிலையில் பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், தாங்கள்தான் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை உடைத்தோம் என்றும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆளும் கட்சி பின்னணி
இதைத் தொடர்ந்து, மிரட்டல் வீடியோ பேசிய சுபாஷ் பண்ணையார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை ஆளுங்கட்சியினர் வளர்ப்பதாக குற்றம்சாட்டினார் அனிதா ராதாகிருஷ்ணன்.
பாதுகாப்பு தேவை
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.