எடப்பாடியாரின் சிபாரிசு கடிதம் நிராகரிப்பு... திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிரடி
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை குப்பையில் தூக்கி எறியாத குறையாக திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். அவ்வாறு அங்கு செல்லும் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரை கடிதத்தை பெற்று சென்ற சுந்தர்ராஜன் அதனை திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிகாரிகளை சந்தித்து கொடுத்துள்ளார். அதை வாங்கி படித்துக்கூட பார்க்காத அவர்கள், வெளிமாநில சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படுவதில்லை என பொட்டில் அடித்தது போல் கூறிவிட்டனர்.
மேலும், ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிபாரிசு கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்த சுந்தர்ராஜன் தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பிற்கும், முதல்வர் கவனத்திற்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார். மேலும், தமிழ் ஊடகங்கள் செய்தி சேகரிக்கவும் திருப்பதி கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மற்றும் தெலுங்கு ஊடகங்களுக்கு மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் இரு மாநில அரசுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. ஏற்கனவே பாலாறு விவகாரம், தமிழக எல்லையோரம் ஆந்திரா அணை கட்டுதல் உள்ளிட்ட விவகாரங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே பஞ்சாயத்து நடைபெற்று வரும் சூழலில் புதிய பஞ்சாயத்து ஒன்றும் சேர்ந்துள்ளது,