எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம்.. திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு ரிசல்ட்.. வாவ்.. பாஸாகி அசத்திய மாற்றுத்திறனாளிகள்.. கலக்கிய கைதிகள்!
3.7 சதவீதம் அதிகம்
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதமும் மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர்
எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 2வது இடம், 98.45 சதவீதத்துடன் நாமக்கல் மாவட்டம் 3வது இடம் பிடித்தது. திருப்பூர் மாவட்டம் 98.53 சதவீதம் பெற்றுள்ளது.
புதுவையில் தேர்ச்சி சதவீதம்
89.98 சதவீதத்துடன் பின் தங்கிய மாவட்டமாக வேலூர் விளங்குகிறது. புதுவையில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இணையதளத்தில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளில் ரேங்க் பட்டியல் முறையை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்தது. தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. www.tnresults.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.