பஸ்ஸில் ஃபுட்போர்டில் காலை தேய்த்தபடியே பயணித்த சிறுவன் கைது.. தண்டையார்பேட்டை போலீஸ் அதிரடி
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஓடிய பேருந்தில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டார்.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் பள்ளி சிறுவன் ஒருவர் பேருந்தில் தொங்கிக் கொண்டு காலை தேய்த்துக் கொண்டபடியே செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதை பார்த்த பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இது போன்ற ஆபத்தான சாகசங்களால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல் சாலையில் செல்வோருக்கும் ஆபத்து என்பதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.

தண்டையார்பேட்டை
இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரும் கூறப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மாணவர் காலை தேய்த்தபடியே பயணம் செய்ததாக கூறப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது பிராட்வே பகுதியிலிருந்து மணலி நோக்கி செல்லும் மாநகர பேருந்தில்தான் இந்த மாணவன் சென்றது தெரியவந்தது.

காலை தேய்த்தபடி பயணம்
அந்த பேருந்தில்தான் ஃபுட்போர்டு அடித்தபடியே காலை தேய்த்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்தியதில் திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த மாணவன் கொருக்குபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

தண்டையார்பேட்டை போலீஸ்
அந்த சிறுவனை பிடித்து தண்டையார்பேட்டை போலீஸார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுவன் தான் செய்தது தவறு என ஒப்புக் கொண்டதுடன் இனி இது போல் செய்ய மாட்டேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த சிறுவன் மீண்டும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.

கோரிக்கை என்ன
ரயில், பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது, பட்டா கத்தியை தேய்த்து கொண்டு வருவது பயணிகளுக்கு அச்சுறுத்தலாக வருவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications